அழிவின் விளிம்பில் இருக்கும் அந்தமான் பழங்குடிகள் 56 பேரில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
போர்ட்பிளேயர்: அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அழிவின் விளிம்பில் இருக்கும் 56 பேரை மட்டுமே கொண்ட பழங்குடி இனத்தவரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்தமான் தீவுகளில் ஆதிமனிதர்களான பழங்குடிகள் இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். மனிதர்களே செல்ல முடியாத தீவுகளிலும் சொற்ப எண்ணிக்கையிலான ஆதி மனிதர்கள் வாழ்கின்றனர்.
சோம்பியன் பழங்குடிகளில் 238 பேர் எஞ்சியுள்ளனர். ஜாரவா பழங்குடிகளில் 520 பேர் இன்னமும் வாழ்கின்றனர். ஓங்கே, சென்டினெல்ஸ் பழங்குடிகள் எண்ணிக்கை 120 மற்றும் 150 என்கிற கணக்கில்தான்
உள்ளனர். இவர்களில் கிரேட் அந்தாமான் பழங்குடிகள்தான் மிக மிக சொற்பமாக 56 பேர் உள்ளனர். 1850களில் இவர்களது மொத்த மக்கள் தொகை 5,000-க்கும் அதிகமாக இருந்தது.
இந்த கிரேட் அந்தமான் பழங்குடிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 2 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பழங்குடிகளுக்கான பாதிப்பு தொடர்பான அறிக்கையை அந்தமான் நிக்கோபர் தீவுகள் நிர்வாகத்திடம் மத்திய அரசு கேட்டிருக்கிறது.
கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே நீட் தேர்வு நடத்த வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அந்தமான் தீவுகளில் மொத்தம் 2,985 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 2,309 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டிருக்கின்றனர். கொரோனாவால் மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அந்தமானில் மொத்தம் 635 பேர் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.