கொள்ளைகள்... சென்னை ரயிலுக்குக் குண்டு வைப்பு.. நாட்டை அலற வைக்கும் 5 தீவிரவாதிகள்!
பெங்களூரு: இந்தியாவை இந்த 5 முக்கியத் தீவிரவாதிகளும் உலுக்கி வருகிறார்கள். சிறையிலிருந்து தப்பி 3 முக்கிய கொள்ளைச் சம்பவங்கள், சென்னையில் ரயிலுக்குக் குண்டு வைத்தது, பிஜ்னூரில் நடந்த குண்டுவெடிப்பு என அடுத்தடுத்து நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் சிமி அமைப்பைச் சேர்ந்த இந்த ஐந்து பேரும் அடுத்து தென் மாநிலங்களில் மிகப் பெரிய நாச வேலையில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாடு முழுவதும் காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இவர்களைப் பிடிக்க தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இவர்களைப் பிடிக்க நேற்று நாடு தழுவிய உஷார் எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. ஆனால் இவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா நகரில் உள்ள சிறையிலிருந்து கடந்த ஆண்டு தப்பியவர்கள் இந்த ஐந்து பேரும். அதன் பின்னர் இவர்களைப் பிடிக்கவே முடியவில்லை. எங்கிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த ஐந்து பேரும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கியத் தீவிரவாதிகளை ஒருங்கிணைத்து இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். குடியரசு தினத்துக்கு முன்பாக நாட்டில் பெரும் நாச வேலையில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்த ஐந்து பேர் மீதான முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.
தற்போது இந்த ஐந்து பேரும் தென் மாநிலங்களில் பெரும் நாச வேலைகளை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஐந்தே ஐந்து பேர் சேர்ந்து ஒட்டுமொத்த பாதுகாப்புப் படையினரையும் திணற வைத்திருப்பது ஆச்சரியத்தை தருவதாக உள்ளது. மேலும் அடுத்தடுத்து இவர்கள் பயங்கர குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதும் பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
தற்போது அனைத்து மாநில போலீஸாரும் இவர்கள் குறித்து உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆரம்பம்:
கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி சிமி அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கந்த்வா சிறையிலிருந்து தப்பினர். டாக்டர் என்று அழைக்கப்படும் அபு பைசல் என்ற தீவிரவாதியின் தலைமையில் இவர்கள் தப்பினர். கந்த்வா சிறையிலிருந்து இரவில் இந்த ஆறு பேரும் தப்பினர். பைசலுடன் சேர்ந்து ஐய்ஸாதீன், மெஹபூர், ஜாகிர் ஹுசேன், அம்ஜத் கான், அஸ்லம் அயூப் ஆகியோரும் தப்பினர்.
சிறையின் 16 அடி உயர சுவரில் ஏறி இவர்கள் தப்பியுள்ளனர். தப்பியோடியவர்களில் பைசல் மட்டும் பின்னர் பிடிபட்டார். ஆனால் மற்றவர்கள் சிக்கவில்லை.
திட்டம்:
சிறையிலிருந்து இவர்கள் தப்பிய பின்னர் தப்பியது தொடர்பாக பல காரணங்கள் உலா வந்தன. சிறை அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என்று மத்தியப் பிரதேச காவல்துறை குற்றம் சாட்டியது. அதேசமயம், ஒரு போலீஸ்காரர்தான் உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரணையும் நடத்தப்ப்டது. ஆனால் இதுவரை ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்கவில்லை.
தப்பி ஓடிய தீவிரவாதிகளின் திட்டமே முடங்கிப் போயுள்ள சிமி அமைப்புக்கு உயிர் கொடுத்து மீண்டும் வீரியத்துடன் செயல்பட வைப்பதாகும். அதேசமயம், இந்த தீவிரவாதிகள் குஜராத்துக்குப் போய் அங்கு பெரும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன. அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களது முக்கியத் தலைவரான சப்தர் நகோரியை சிறையிலிருந்து மீட்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்தனராம்.
ஆனால் இவர்கள் யாருமே குஜராத்துக்குப் போகவில்லை. மாறாக, இவர்களின் நிழலைக் கூட அறிய முடியாத நிலைக்கு உளவுத்துறை அதிகாரிகள் திணறலுக்குள்ளானார்கள்.
கொள்ளைச் சம்பவங்கள்:
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி மிக முக்கியமான வங்கிக் கொள்ளை நடந்தது. அங்குள்ள ஸ்டேட் வங்கியில் ஒரு கும்பல் கொள்ளையடித்து. இதில் ஈடுபட்டவர்கள் இந்த தீவிரவாதிகள்தான் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திற்கு இவர்கள் திரும்பி வந்துள்ளனர். அங்கு சத்னா என்ற இடத்தில் உள்ள ஒரு ஊரக வங்கியில் இவர்கள் கொள்ளையடித்தனர். அங்கு துப்பாக்கி முனையில் இவர்கள் ரூ. 15 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பினர்.
குண்டுவெடிப்புகள்:
அத்துடன் இவர்கள் நிற்கவில்லை. இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் ஈடுபட்டனர். உ.பி. மாநிலம் பிஜ்னூரில் நடந்த குண்டுவெடிப்புக்கு இவர்கள்தான் காரணம். பிஜ்னூரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் குண்டுவெடித்தது. இது தற்செயலாக நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸார் விரைந்து வருவதற்குள் அந்த வீட்டில் இருந்தோர் தப்பி ஓடி விட்டனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு கந்தவா சிறையிலிருந்து தப்பிய ஐவர்தான் காரணம் என்று உ.பி. போலீஸார் கூறியுள்ளனர்.
அடுத்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெங்களூரிலிருந்து வந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு. இதில் ஸ்வாதி என்ற ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் பலியானார். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குக் காரணம் சிறையிலிருந்து தப்பிய தீவிரவாதிகள்தான் காரணம் என்று பின்னர் ஒரு விசாரணைத் தகவல் தெரிவித்தது.
உஷார்:
இந்த நிலையில் இந்த ஐந்து பேரும் சேர்ந்து கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடலாம் என்று உளவுத்துற எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாநில போலீஸார் விழித்தெழுந்துள்ளனர். தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கும் கண்காணிப்பில் தீவிரமாகியுள்ளனர் போலீஸார்.
அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
ஆனால் மாநில போலீஸாருக்குக் கொடுக்கப்படும் பல உளவுத் தகவல்கள் முறையாக காவல்துறையினரால் பின்பற்றப்படுவதில்லை என்று மத்திய உளவுத்துறை வருத்தப்படுகிறது. மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை மட்டும் கொடுக்கும். பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை மாநில போலீஸார்தான் செய்ய வேண்டும். ஆனால் அதில் மெத்தனம் தெரிவதாக உளவுத்துறை கூறுகிறது.
போலீஸாரை ஏமாற்றியபடி இந்த ஐந்து பேரும் தொடர்ந்து தப்பி வருவதை இதற்கு முக்கிய உதாரணமாக காட்டுகிறது உளவுத்துறை. இதனால் பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த ஐந்து பேரையும் பிடிக்காவிட்டால் நாட்டின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகி விடும் என்ற நிலையில் காவல்துறையினர் இதை சவாலாக எடுத்துக் கொண்டு தீவிரம் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.