ஆந்திரா போலீசின் கொடூர என்கவுண்ட்டர்? 5 தமிழர்களை அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியதா?
ஆந்திராவில் 5 தமிழர்களை அம்மாநில போலீசார் அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
கடப்பா: ஆந்திராவில் 5 தமிழர்களை போலீசார் அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்படுகிறது.
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கூறி 2015-ம் ஆண்டு 20 தமிழர்களை சுட்டு படுகொலை செய்தனர் அம்மாநில போலீசார். காக்கை குருவிகளைப் போல தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
30 தமிழர்கள் படுகொலை
இது ஆந்திரா அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இதுவரை 30 தமிழர்கள் ஆந்திரா போலீசால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.
ஏரியில் தமிழர்கள் சடலம்
இந்த நிலையில் ஆந்திராவின் கடப்பா ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்மரம் வெட்ட சென்ற தமிழர்களை அம்மாநில போலீசார் அடித்தே கொலை செய்துவிட்டு தற்கொலை போல ஏரியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆந்திரா போலீஸ் கொலை செய்தது?
மனித உரிமை சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கவே இப்படியான படுபாதக படுகொலையை ஆந்திரா போலீசார் நிகழ்த்தியுள்ளனர் எனவும் சந்தேகம் எழுப்பப்படுகிறது. இது தொடர்பாக உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
அடையாளம் காணும் பணி
ஆந்திரா ஏரியில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்களது உடைமைகளில் இருந்து சில தொலைபேசி எண்கள், புகைப்பட்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.