கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 1ம் வகுப்பு மாணவன் பலி
ஹைதராபாத் அருகே பள்ளிக்கூடத்தில் மதிய உணவு வாங்க வரிசையில் நின்ற ஒன்றாம் வகுப்பு மாணவன் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் நின்ற 1ம் வகுப்பு மாணவன் அருகில் இருந்த சாம்பார் அண்டாவில் விழுந்தான். இதில் பலத்த காயமடைந்த அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
ஹைதராபாத்தை அடுத்த ஈடாலூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஜெகன்னாத் என்ற மாணவன் 1ஆம் வகுப்பு படித்து வந்தான்.
வெள்ளிக்கிழமை மதியம் பள்ளியில் மதிய உணவு வாங்குவதற்காக சிறுவன் வரிசையில் நின்றுள்ளான். அப்போது உணவை வாங்கும் அவசரத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டியில் ஜெகன்னாத் தவறி அருகில் இருந்த சாம்பார் அண்டாவில் விழுந்துள்ளான்.
சூட்டால் வலி தாங்க முடியாமல் அலறிய சிறுவனை மீட்டு அருகில் இருந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் மேல் சிகிச்சைக்காக உஸ்மானியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
60 சதவீத தீக்காயங்களுடன் போராடிய சிறுவன் ஜெகன்னாத் சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று காலை உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பள்ளிக்கூடத்தில் சமையல் வேலை செய்து வரும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெகன்னாத்தின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என நல்கொண்டா மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.