பிளாஷ்பேக் 2014 : இந்தியாவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்!
டெல்லி : இதோ 2014ம் ஆண்டின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். இன்றோடு 2014ம் ஆண்டு முடிந்து 2015ம் ஆண்டு பிறக்க இருக்கிறது.
எல்லா வருடங்களைப் போலவுமே இந்த ஆண்டும் வரலாறு பேசும் சம்பவங்களையும், சொல்லொண்ணாத் துயரங்களையும் பரிசளித்துச் செல்ல இருக்கிறது.
அந்த வகையில், இந்தாண்டு இந்தியாவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்...
செல்லாத நோட்டுக்கள்...
2005ம் ஆண்டுக்குப் பின்னர் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களில் வருட எண் அச்சடிக்கப்படாத ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவது என்று மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 22ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
தேவ்யானி விவகாரம்...
விசா மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய தூதகர அதிகாரி தேவ்யானி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதிமுகவில் இணைந்த பண்ருட்டியார்...
தேமுதிகவின் மூளையாக திகழ்ந்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி அதிர்ச்சி அளித்தார். அதே அதிரடியோடு அவர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுவிவிலும் இணைந்தார். இது நடந்தது பிப்ரவரி 19ம் தேதி.
விஜயசாந்தி...
தெலுங்கான போராட்டத்தில் முக்கிய அம்சமாக திகழ்ந்து வந்தவரான நடிகை விஜயசாந்தி திடீரென காங்கிரஸில் போய்ச் சேர்ந்தார்.
முறிந்து போன சிம்பு - ஹன்சிகா காதல்...
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிம்பு - ஹன்சிகா காதல் பிப்ரவரி 26ம் தேதி முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்து விட்டதாக சிம்பு அறிவித்தார்.
ரஜினியை சந்தித்த மோடி...
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நரேந்திர மோடி ஏப்ரல் 13ம் தேதி சென்னை வந்தார். போயஸ் கார்டனுக்கு விசிட் அடித்த அவர் நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மோடியைச் சந்தித்த விஜய்...
ஏப்ரல் 16ம் தேதி கோவை சென்று நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்து தன் பங்குக்கு பரபரப்பைக் கிளப்பினார்.
முல்லைப் பெரியாறு அணை...
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம். இதுதொடர்பாக கேரள அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்று உச்சீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது.
ப்ரீத்தியின் புகார்...
ஐபிஎல் போட்டியின்போது மைதானத்தில் தன்னிடம் சில்மிஷமாக நடந்து கொண்டதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பார்ட்னரும், முன்னாள் காதலருமான நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா பரபரப்புக் குற்றச்சாட்டை ஜூன் 14ம் தேதி தெரிவித்தார்.
தெலுங்கானா பிறந்தது...
பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானா ஜூன் 1ம் தேதி பிறந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் கூட்டுத் தலைநகராக ஹைதராபாத் 10 வருடங்களுக்கு நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது
காணாமல் போன நகைகள்...
நடிகை அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படப்பிடிப்பின்போது ஒரு கிலோ தங்க நகைகள் திருட்டுப் போய் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்லாமுக்கு மாறிய யுவன்...
முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாமிய மதத்தைத் தழுவியதாக அறிவித்தது திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐ... அர்னால்ட்
ஐ பட ஆடியோ விழாவுக்காக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷெனகர் சென்னை வந்தது பெரும் பரபரப்பாக இருந்தது. அவருடன் போட்டோ எடுத்து வெளியிட்டு சந்தோஷப்பட்டார் நடிகர் சூர்யா. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை அர்னால்ட் நேரில் சந்தித்துப் பேசினார். இதற்காக கோட்டைக்கு வந்த அர்னால்டுடன் காவல்துறை அதிகாரி ஒருவர் புன்னகை தவழ புகைப்படம் எடுத்துக் கொண்டது பேஸ்புக்கில் வைரலாக பரவியது.
கண்ணீரோடு பதவியேற்பு...
முதல்வர் பதவியிலிருந்து ஜெயலலிதா அகற்றப்பட்டதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். அமைச்சர்களும் புதிதாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவின்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் அனைத்து அமைச்சர்களும் கண்ணீர் விட்டபடியும், கதறி அழுதபடியும் பதவியேற்ற காட்சி நாடு முழுவதும் பரபரப்பாகவும், கேலியும் கிண்டலுமாகவும் பேசப்பட்டது.
தமிழக மீனவர்களின் தூக்கு...
தமிழக மீ்னவர்கள் அகஸ்டஸ், லாங்லெட், வில்சன், எமர்சன், பிரசாத் ஆகியோருக்கு இலங்கை கோர்ட் மரண தண்டனை விதித்த செயல் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரத்தில் பெரும் கலவரம் வெடித்தது. ராமேஸ்வரமே போர்க்களமானது. பின்னர் அவர்களின் தூக்கை ரத்து செய்து, அவர்களை விடுவித்தது இலங்கை.
தமிழ் மாநில காங்கிரஸ்...
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உடைந்தது. ஜி.கே.வாசன் தலைமையில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் பிறந்தது.
காங்.கிற்கு ‘கை’ கொடுத்த குஷ்பு...
திமுகவிலிருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் சேருவார் என்ற பேச்சு இருந்தது. ஆனால், கொஞ்சகாலம் படத்தயாரிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன் என்றவர் அதிரடியாக காங்கிரஸில் இணைந்தார்.
அழகிரி நீக்கம்...
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாக அதிரடியாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் முன்னாள் மத்திய அமைச்சரும், அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான அழகிரி.
வைகோ அதிரடி...
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசினால் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று பாஜக தலைவர் எச்.ராஜா பேசியது அரசியல் அரங்கிலும், தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது.
நோபல் பரிசு...
டிசம்பர் 10ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசை பாகிஸ்தானின் மலாலா. இந்தியாவின் சத்யார்த்தி ஆகியோர் இணைந்து பெற்றனர்.
கர்நாடகா அணை...
காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்து அதிர்ச்சி அளித்தது கர்நாடக அரசு. இந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது கனவாகி விடும். இதனால் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் என தமிழகத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், எப்படியும் அணையைக் கட்டியே தீருவது என அடம்பிடிக்கிறது கர்நாடகா.
அஸ்ஸாம் தாக்குதல்
அஸ்ஸாமில் பழங்குடியின மக்கள் மீது போடோ தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத்தாக்குதலில் 83 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாட்டின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்யும் வகையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக்குடன் ஆலோசனை நடத்தினார்.
மங்கள்யான்...
ஹாலிவுட் படமான கிராவிட்டியின் தயாரிப்புச் செலவை விடக் குறைந்த செலவில் மங்கள்யானை உருவாக்கி உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தது இந்தியா. இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்தபடி, இந்தியாவின் பெருமையை உலக நாடுகளுக்கு பறை சாற்றி வருகிறது.
சட்டீஸ்கர் குடும்ப கட்டுப்பாடு முகாம்...
சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 11 பெண்கள் பரிதாபமாக உயிழந்தனர். துருப்பிடித்த கருவிகள் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்ததே பெண்களின் மரணத்திற்கு காரணம் என்றும், அவர்களுக்கு அளிக்கப் பட்ட மருந்தில் எலி விஷம் கலக்கப் பட்டிருந்தது என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின. இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்களின் குழந்தைகளை அரசே தத்தெடுத்துக் கொண்டது.
பஞ்சாப் கண் சிகிச்சை முகாம்...
சட்டீஸ்கர் கருத்தடை முகாம் அதிர்ச்சி நீங்குவதற்குள்ளாக பஞ்சாப் கண் சிகிச்சை முகாம் 60 பேரின் பார்வையை கேள்விக் குறியாக்கியது. பஞ்சாபில் நடந்த கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களின் 15 பேருக்கு முற்றிலும் பார்வை பறி போனது. சுமார் 45க்கும் மேற்பட்டோருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.