பிளாஷ்பேக் 2014: இந்தியாவை அலற வைத்த புலிகள்...!
டெல்லி: டெல்லி உயிரியல் பூங்காவில் மாணவர் ஒருவரைக் கடித்துக் கொன்றது, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணாமல் போய் கண்ணாம்பூச்சி காட்டியது என இந்த வருடம் மக்களை ரொம்பவே கிலியடையச் செய்தன புலிகள்.
உயிரியல் பூங்காவிற்கு வரும் பெரும்பாலானவர்கள் பார்க்க விரும்புவது புலி, சிங்கம் போன்ற மிருகங்களைத் தான். ஊர் ஊராகச் சென்று சர்க்கஸில் புலி, சிங்கம் போன்றவைக் காட்டப் படுவது தடை செய்யப் பட்டதைத் தொடர்ந்து, உயிரியல் பூங்காக்களில் மட்டுமே அவற்றைப் பார்க்க முடிகிறது.
இந்நிலையில், இந்தாண்டு நடந்த கசப்பான சம்பவங்கள் சிலவற்றால் புலியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது என்றால் மறுக்க இயலாது.
டெல்லி சம்பவம்:
டெல்லி உயிரியல் பூங்காவில் இந்தாண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி யாரும் எதிர்பாராத நேரத்தில் புலி வசித்த பகுதிக்குள் தவறி விழுந்தார் மாணவர் ஒருவர். சுற்றி நின்றவர்கள் அனைவரும் கூச்சலிட அதுவரை அமைதி காத்த புலி, அம்மாணவனைக் கடித்து தூக்கிச் சென்று கொன்றது.
கூச்சலே காரணம்...
நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது இச்சம்பவம். பூங்காவில் பாதுகாப்பாளர்களால் பராமரிக்கப் பட்டு வந்த அந்த வெள்ளைப் புலி மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றவே மாணவரைக் கடித்ததாகக் கூறப்பட்டது.
மனநிலை ஆய்வு...
பின்னர், வெள்ளைப் புலியின் மனநிலை குறித்து சோதனைகள் செய்யப்பட்டு, அது நலமாக இருப்பதாகக் கூறப்பட்டது. மாணவரைக் கொன்ற வெள்ளைப் புலியை கொல்ல வேண்டும் என்றும், இல்லை வேண்டாம் என்றும் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப் பட்டன.
கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை...
சம்பவம் நடந்த மறுதினம் புலி விஜயைப் பார்ப்பதற்கு என்றே டெல்லி உயிரியல் பூங்காவிற்கு அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் குவிந்தனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக நாட்டிலுள்ள அனைத்து பூங்காக்களிலும் பார்வையாளர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.
தப்பிச் சென்ற புலிகள்...
இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே வண்டலூர் புலிகள் காணாமல் போய் பரபரப்பை உண்டாக்கின. கடந்த மாதம் பெய்த கனமழையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிகள் வாழ்ந்து வந்த பகுதி தடுப்புச் சுவர் உடைந்தது. இதனால், அங்கிருந்த 5 புலிகள் வனப்பகுதிக்குள் தப்பியோடின.
போக்கு காட்டிய வித்யா...
பின்னர் மற்ற புலிகள் மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பி விட வித்யா என்ற புலி மட்டும் சில தினங்கள் அதிகாரிகளுக்கு போக்கு காட்டியது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும், பூங்காவின் சுற்றுப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தவர்களும் புலி பயத்தால் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தனர்.
இறைச்சி ஆசையில் சிக்கியது...
வித்யா புலிக்காக பிரத்யேக கூண்டு அமைக்கப்பட்டு கேமரா மூலம் அது கண்காணிக்கப் பட்டது. பின்னர் சில தினங்களுக்குப் பின்னர் கூண்டில் வைக்கப் பட்டிருந்த இறைச்சியை சாப்பிட வந்த புலி பூங்கா ஊழியர்களிடம் சிக்கியது.