beef முதல் beep வரை... 2015ல் அதகளப்படுத்திய அடேங்கப்பா வார்த்தைகள்!
டெல்லி: சில வார்த்தைகள் வரலாறு படைக்கும்.. பல வார்த்தைகள் வரலாற்றையே புரட்டிப் போடும். அந்த வகையில், இந்தாண்டு நம் காதுகளில் அடிக்கடி சில வார்த்தைகள் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருந்தன.
அதில் ஒன்று பிரளயம் கிளப்பியது.. இன்னொன்று பிரச்சினையைக் கிளப்பியது.காலத்திற்கு தகுந்த மாதிரி அவ்வப்போது சில வார்த்தைகள் பரபரப்பை ஏற்படுத்தின.
பின் வழக்கம் போல், இரு கோடுகள் தத்துவத்தில் மற்றொரு வார்த்தை விஸ்வரூபம் எடுத்து, பழைய வார்த்தையை மறக்கடித்தது.
அப்படியாக கடந்தாண்டு பெரும் பரபரப்புகளை ஏற்படுத்திய வார்த்தைகளின் தொகுப்பு...
பீஃப்...
பீஃப்... மாட்டிறைச்சி என்ற வார்த்தை தான் இந்த ஆண்டு அதிகம் உச்சரிக்கப்பட்டது எனலாம். பிரதமர் மோடியைக் கூட பின்னுக்குத் தள்ளி கூகுள் தேடலில் பசு இடம் பிடித்தது. மாட்டிறைச்சி விவகாரத்தால் பல இடங்களில் மோதல்கள் வெடித்தன.
தாத்ரி படுகொலை...
இதுவரை சத்தமில்லாமல் சாப்பிட்டு வந்தவர்கள் கூட, ‘நான் ஃபீப் சாப்டுறேன்' என ஸ்டேடஸ் தட்டி விட்டு வார்த்தைகளைப் பரப்பினார்கள். இந்த விவகாரத்தில் தாத்ரி படுகொலை சம்பவம் தான் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல், காஷ்மீரில் பீப் விருந்து நடத்தி சட்டசபைக்குள் அடி வாங்கிய எம்.எல்.ஏ.வை யாரும் மறந்திருக்க முடியாது.
சகிப்புத்தன்மை...
2015-ம் ஆண்டில் அறிவுஜீவிகள் பலர் தங்கள் விருதுகளை திருப்பியளிக்கவும், நடிகர்கள் பலர் சர்ச்சையில் சிக்கவும், எப்போதுமே கூச்சல் குழப்பத்துடன் இருக்கும் நாடாளுமன்றம் இன்னும் கூடுதலாக அமளி துமளியாக இருக்கவும் காரணமாக அமைந்தது இந்த வார்த்தை.
விருதுகள்...
9 எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்தனர். ஒரு கலைஞர் தனது லலித் கலா அகாடமி விருதை திருப்பி அளித்தார். இதுதவிர சினிமா பிரபலங்கள் சிலர் தேசிய விருதினை திருப்பியளித்தனர்.
நமக்கு நாமே...
ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் இந்தாண்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. ஸ்டாலின் இந்த பயணத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், இந்தப் பயணத்தில் பிளஸ்களைப் போலவே, தோரணம் கட்டிய பஸ்சில் ஏறியது, பட்டுச் சேலை கட்டி வயலில் வேலை பார்த்த பெண்கள், ஷூ காலுடன் கோயிலுக்கு சென்றது என மைனஸ்களும் இருந்தது.
கனமழை...
2015ம் ஆண்டை மறக்க முடியாதபடி தமிழகத்தில் கனமழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. எங்கெங்கு காணினும் தண்ணீர் என சென்னை முழுவதும் கண்ணீர் தேசமாக மாறியது.
நிவாரணம்...
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மழை, வெள்ளம், நிவாரணம் என்ற வார்த்தைகள் தான் அதிகம் மக்களின் காதுகளில் ஒழித்தது. ஆனால், இந்த வெள்ளத்தால் மக்களுக்கு இடையே இருந்த இடைவெளி காணாமல் போனது. பதற்றமாகக் கடந்து போகும் டிசம்பர் 6ம் தேதியும் சென்னை மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டியது.
செம்பரம்பாக்கம்...
செம்பரம்பாக்கம் என்றொரு ஏரி இருக்கிறதா என்பதைத் தெரியாதவர்களின் வீட்டையும் கூட மூழ்கடித்தது அதில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர். மனித தவறு தான் காரணம், இல்லையில்லை இயற்கையின் சதி என ஆயிரத்தெட்டு காரணங்கள் கூறினாலும், ஏரில 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேத்துறாங்களாம் என அடிக்கடி செம்பரம்பாக்கம் அனைவரது வாயிலும் ஒருமுறையாவது வந்து போனது.
ரமணன்...
மழை வராத போது ரமணனைக் கிண்டல் செய்த மக்கள், இம்மழையின் போது அவரைக் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையால் மழை நாயகன் ஆனார் ரமணன். நாளைக்கு மழை வரும்னு சொல்லுவாரா, ஸ்கூலுக்கு லீவு கிடைக்குமா என பள்ளிக் குழந்தைகள் ரமணா மந்திரம் பாடினார்கள்.
ஸ்டிக்கர்...
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கெங்கிருந்தோ உதவிகள் வந்து குவிந்தது. ஆனால், அவற்றில் ஆளும் கட்சியினர் அம்மா ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டிக்கர் விவகாரத்தை நெட்டிசன்கள் மிம்ஸ் தயாரித்து கொண்டாடினார்கள்.
பீப் சாங்...
வெள்ளம் வடிந்த நிலையில் விஸ்வரூபம் எடுத்தது பீப் பாடல். அனிருத் இசையில் சிம்பு பாடிய இப்பாடல் இணையத்தில் வெளியானது. பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாகக் கூறி இப்பாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைமறைவு...
தொடர்ந்து இப்பாடலுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. சிம்பு, அனிருத் மீது வழக்குகள் பதியப் பட்டுள்ளன. அனிருத் கனடாவில் தங்கி இருக்க, சிம்பு எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.
த்தூ..
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்ற கதையாக வருஷம் நல்லபடியாக முடியப் போகும் நேரம் பார்த்து இந்த "த்தூ"..என்ற ஒற்றை வார்த்தை வந்து பீப்பையே ஓரங்கட்டி விட்டது.