துபாய் பயணிகளின் கவனத்திற்கு... உங்கள் விமானம் சார்ஜாவிற்கு ‘டேக் டைவர்சன்’ ஆகிறது!
டெல்லி: துபாய் விமான நிலையத்தில் உள்ள விமான ஓடுதளங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெறும் காரணத்தால், இந்தியாவிலிருந்து அங்கு செல்லும் விமானங்கள் இனி வரும் 80 நாட்களுக்கு சார்ஜாவிற்கு மாற்றி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களை சார்ஜாவிற்கு செல்லும்படி பயண திட்டத்தை மாற்றி அமைத்துள்ளன. இதனால் பயண நேரத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானமும், விசாகப்பட்டிணத்திலிருந்து ஹைதராபாத் மார்க்கமாக துபாய் செல்லும் விமானமும் சார்ஜாவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
பராமரிப்பு வேலைகள்...
இது தொடர்பாக துபாய் விமான நிலையம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று முதல் வரும் 80 நாட்களுக்கு விமானநிலைய ஓடுதள பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் சில குறிப்பிட்ட விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களாக...
மேலும், இந்தப் பராமரிப்புப் பணி இரண்டு இரண்டு ஓடுதளங்களில் மாற்றி மாற்றி நடைபெற உள்ளதால், முதல்கட்டமாக தெற்குப்பகுதி ஓடுதளம் வரும் மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், வடக்குப் பகுதி ஓடுதளம் மே 31ம் தேதி முதல் ஜூலை 20ம் தேதி வரையிலும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 சதவீதம் குறைப்பு...
இந்தக் காலகட்டத்தில் துபாய் வந்து செல்லும் விமானங்கள் 26 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ அறிவிப்பு...
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்தியாவின் 6 முக்கிய நகரங்களில் இருந்து இதுவரை 56 ஏர்லைன் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. அவை தற்போது 37 விமானங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் இந்த புதிய சேவையை மாற்றியமைக்கப்பட்ட நேர அட்டவணையைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா....
அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தகவலில், துபாய் விமான நிலைய ஓடுதள பராமரிப்பு வேலைகளால் இதுவரை துபாயிலிருந்து அமிர்தசரஸ், லக்னோ, திருச்சி, ஜெய்ப்பூர் மற்றும் புனே வரை செல்லும் விமானங்கள், இந்த 80 நாட்களுக்கு சார்ஜாவிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் உறுதி...
விமான பயணப் பாதை மாற்றப்பட்டுள்ளதால் தங்களது விமானங்கள் ஏதும் ரத்து செய்யப்படவில்லை என பயணிகளுக்கு ஜெட் ஏர்வேஸ் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.