உ.பி-யில் மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு வீட்டுக்குள் புகுந்த 4 முதலைகள் மீட்பு!
லக்னோ: வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட முதலைகள் கிராமப் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்வதால் கிராம மக்கள் பீதியில் உரைந்துள்ளனர்.
வட மாநிலங்களான பீகார், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கங்கை, யமுனா, உள்ளிட்ட அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தல் சுமார் 30 லட்சம் பேரும், பீகார் மாநிலத்தில் சுமார் 20 லட்சம் பேரும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மிர்சாபூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட முதலைகள் அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்துள்ளன. இதனிடையே அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 4 முதலைகள் இருப்பதை அறிந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் முதலைகளை அங்கிருந்து மீட்டு, வெள்ளம் வடிந்துள்ள ஆற்றுக்குள் விட்டனர்.
மேலும், சில முதலைகள் ஊருக்குள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளதால், முதலைகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளன. அபாயகரமான முதலைகள் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உரைந்துள்ளனர்.