மொத்தமாக உடையும் நிலையில் கொள்ளிடம் இரும்பு பாலம்.. அதிகாரிகள் ஆய்வு!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில், திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
பெங்களூர்: காவிரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் வரும் நிலையில், திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த விரிசல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
தற்போது அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு நீர்திறப்பு மீண்டும் அதிகமாகி உள்ளது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 2.10 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி கல்லணைக்கும் கொள்ளிடம் அணைக்கும் தண்ணீர் அதிகமாக வருகிறது.
கொள்ளிடம் பாலம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீரங்கத்தையும், நெ.1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த இரும்பு பாலம் கட்டப்பட்டது. புதிய பாலம் கட்டப்பட்ட பின் பழைய கொள்ளிடம் இரும்பு பாலத்தில் குறைவான எடைகொண்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்பட்டது. இப்போதும் அது தொடர்கிறது.
பெரிய விரிசல்
இந்த நிலையில்தான் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது. பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பயணிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும், அதிக எடை கொண்ட வாகனங்களை ஓட்டி செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த பகுதியில் விரிசல்
கொள்ளிடம் ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தண்ணீர் மிக அதிகமான வேகத்தில் செல்கிறது. 23 தூண்களை கொண்ட பாலத்தின் 18-வது தூணில் விரிசல் ஏற்பட்டது. இது சிமெண்டு மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட தூண் ஆகும்.
அதிக விரிசல்
நேரம் போக போக பாலத்தின் தூணில் ஏற்பட்ட விரிசல் அதிகமானது. பாலத்தின் 18வது தூண் மொத்தமாக இடியும் நிலையில் உள்ளது. பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த விதமான வாகனங்களையும் ஓட்டி செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.