கண்ணீர் வெள்ளத்தில் காஷ்மீர்... உயிரைப் பணயம் வைத்து மீட்கும் ராணுவம்.. குவியும் பாராட்டு!
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் மூழ்கியுள்ளன. பாலங்களும், சாலைகளும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்துள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெருவெள்ளத்தின் தாக்கத்தில் பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், இடைவிடாமல் 24 மணி நேரமும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்ப்போது ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் மீட்புப் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மட்டும் 4 லட்சம் பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பல்வேறு இடங்களில் வீட்டுக் கூரைகள் மீதும், கட்டிடங்கள் மீதும் மக்கள் தவித்து வரும் நிலையில், ராணுவத்தினருடன் இந்திய கடற்படை திங்கள்கிழமை முதல் முறையாக மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
22000 பேர் மீட்பு
இந்திய விமானப் படையின் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்புப் படையினர் இதுவரை தெற்கு காஷ்மீரில் 22,000 பேரை மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்திய கடற்படை வீரர்கள்
ஜம்மு - காஷ்மீரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவமும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீரில் நேற்று ஸ்ரீநகர் - சோபூர் நெடுஞ்சாலையில் சிக்கியிருந்த 200 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடற்படையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் மக்கள்
அவந்திபூர், அனந்தநாக் பகுதிகளில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு காஷ்மீரில் வானிலை ஓரளவு சீராக இருப்பதால், அங்கு மீட்புப் பணிகள் தடையின்றி நடைபெறுகின்றன.
மருத்துவக்குழுவினர்
வானம் மேகமூட்டமில்லாமல் இருப்பதால் மீட்புப் பணியில் நிறைய ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. அனந்தநாக் மாவட்டத்திற்கு மருத்துவ குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மோசமான வானிலை
ஒரு சில இடங்களில் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளை துரிதமாக செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீநகரில் 25 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை படகுகள் உதவியுடன் 5,183 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும், ஆயிரக்கணக்கானோர் அங்கு சிக்கியுள்ளனர்.
வெள்ளத்தால் சூழ்ந்த பகுதிகள்
ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கண்டோன்மெண்ட், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் ஆகிய முக்கிய அரசு கட்டிடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மீட்புப் பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க உத்தம்பூர் மாவட்டம் பசோரி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க ராணுவம் விரைந்துள்ளது.
சாட்டிலைட் தொலைபேசிகள்
"மாநிலத்தில் தொலைதொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால், களத்தில் உள்ள மீட்புக் குழுவினருடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க மீட்புக் குழுவினருக்கு சுமார் 500 சாட்டிலைட் தொலைபேசிகளை வழங்கியிருப்பதாக டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை தலைவர் ஓ.பி.சிங் கூறியுள்ளார்.
மூன்று பகுதிகளாக பிரிப்பு
மாநிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொண்டு மீட்புப் பணிகளை செய்து வருகிறோம். குழந்தைகள், பெண்கள் உள்பட 5,183 பேரை இதுவரை மீட்டிருக்கிறோம். 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன" என்றார்.
நன்றி கூறும் மக்கள்
இந்திய ராணுவத்தின் சேவை பாராட்டிற்குரியது. 130 ராணுவ துருப்புகள் இதுவரை எங்கள் பகுதியில் 14,800-க்கும் அதிகமானவர்களை காப்பாற்றியுள்ளனர். அவர்களுக்கு நன்றி என்று வெள்ளத்தில் சிக்கி மீண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.