கேரள வெள்ளத்துக்கு மாட்டுக்கறிதான் காரணம்: கர்நாடக பாஜக எம்எல்ஏ உளறல்
கேரள வெள்ளத்துக்கு காரணம் மாட்டுக்கறி என கர்நாடக எம்எல்ஏ கூறியுள்ளார்.
Recommended Video
விஜய்புரா: கேரள வெள்ளத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், கர்நாடக பாஜக எம்எல்ஏ ஒருவர் புதுவித விளக்கம் அளித்துள்ளார்.
கேரள வெள்ளம் வந்தாலும் வந்தது, அவங்கவங்க இஷ்டத்துக்கு ஒவ்வொரு காரணங்களை அடுக்கி கொண்டே போகிறார்கள். கேரளத்தின் மின்சாரத்துறைக்கும், நீர்வளத்துறைக்கும் சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்று ஒரு பக்கம் கூறுகிறார்கள்.
முல்லைப்பெரியாறு அணையை தமிழக அரசு ஒரேடியாக திறந்துவிட்டதுதான் வெள்ளத்துக்கு காரணம் என இன்னொரு பக்கம் கூறுகிறார்கள். இதை தவிர, காடுகளை அழித்து வருவது, பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களும் சொல்லப்பட்டன.
ஐயப்பனுக்கு கோபம்
ஆனால் எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை எல்லாமே அறிவியலுடன் தொடர்புடையது. பகுத்தறிவுடன் ஒத்து போவது. பூகோள அமைப்புடன் சேர்ந்த இயற்கையின் அம்சமாகவே கருதி பார்க்கப்படுகிறது. ஆனால் கேரள வெள்ளத்திற்கு சொல்லப்பட்ட 2 காரணங்கள் மட்டும் நிறைய விமர்சனத்துக்கு உள்ளான கருத்துக்களாக அமைந்தன. அதில் ஒன்று, சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைய வேண்டும் என்று எண்ணியதை கண்டு, ஐயப்பனின் கோபமே இந்த வெள்ளப்பெருக்குக்கு காரணம் என ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்து பெருமளவு விமர்சனங்களை தாங்கி வந்தது.
இனியாவது தவிர்ப்பார்களா?
ஆனால் இதைவிட முக்கியமாக, கேரள மாநில மக்கள் அதிக அளவில் மாட்டிறைச்சியை சாப்பிடுவதால்தான் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை அகில இந்திய இந்து மதம் மகாசபா தலைவர் சக்கரபாணி மகாராஜ் தெரிவித்திருந்தார். அளவுக்கு அதிகமாக மாடுகளை கொன்று குவித்து அதனை உணவாக சாப்பிட்டதாலேயே இப்படி நிகழ்ந்துவிட்டதாகவும், இனியாவது அம்மாநில மக்கள் மாட்டிறைச்சியை சாப்பிடுவதை தவிர்கக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இவரது இந்த பேச்சிற்கு இதற்கு சமூவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
மாட்டிறைச்சி திருவிழா
இந்நிலையில் இதே கருத்தை கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும் முன்னாள் மத்திய மந்திரியுமான பசன் கவுடா பாட்டில் யட்னால் கூறியுள்ளார்.
இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும் என்பதற்கு உதாரணம்தான் கேரள வெள்ளம் என்று கூறியுள்ளார். கேரள மக்கள் நேரிடையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்ததுடன், கடந்தாண்டு இதே மாதம் தான் அங்கு மாட்டிறைச்சி சாப்பிடும் திருவிழா நடத்தப்பட்டது. கேரளா வெள்ளத்துக்கு இது தான் காரணம். ஆனால் கர்நாடகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், மாடு வதை செய்யப்படுவதற்கு தடை கொண்டு வரப்படும். என்றும் பசன் கவுடா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மட்டுமா?
எப்படியும் இவரது கருத்தும் சர்ச்சையில்தான் முடியபோகிறது என்பது சந்தேகமில்லை. இருந்தாலும் இப்படி கருத்துக்களை வாரி வீசுவதற்கு முன் இவர்கள் ஒருசிலவற்றை நினைத்து பார்க்க வேண்டாமா? மாட்டிறைச்சியை சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் நடந்து வருவது. லட்சக்கணக்கான மக்கள் இவற்றை உண்டும் மறைந்தும் இருக்கிறார்கள். இந்த இறைச்சியை சாப்பிட்ட தலைமுறைகள் பல்வேறு மாநிலங்களில் தழைத்தோங்கி வாழ்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கேரள மாநிலம் மட்டும் மாட்டிறைச்சியை சாப்பிடுவதாக இவர்களுக்கு யார் சொன்னது? மாடுகள் வெட்டப்படும் எண்ணிக்கை கேரளத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லையா? அங்கெல்லாம் இதுபோன்ற பேரிடர் வரவில்லையே ஏன்?
குடகு பாதிப்பு ஏன்?
கேரளாவில் ஒன்றும் இந்த வருடம்தான் மாட்டிறைச்சியை புதிதாக சாப்பிட தொடங்கவில்லையே? அப்படியே மாட்டிறைச்சிதான் கேரள வெள்ளத்துக்கு காரணம் என்றாலும், போன மாதம் இதே போன்ற ஒரு வெள்ள பாதிப்புதானே குடகு மாவட்டத்துக்கும் ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம் அத்தனை நாள் வெள்ளநீரில் தவித்து வாழ்வாதாரத்தை இழந்ததற்கு காரணம் என்ன? என்று அம்மாநிலத்தை சேர்ந்த பசன் கவுடாவே பதிலளிப்பாரா?