கொல்கத்தா பாலம் இடிந்தது கடவுள் செயல் என குதர்க்கமாக பேசிய பில்டர்ஸ்.. கைது செய்ய விரைந்தது போலீஸ்
கொல்கத்தா: கொல்கத்தாவில் இடிந்து விழுந்த மேம்பாலத்தை கட்டி வரும் ஐவிஆர்சிஎல் நிறுவன அதிகாரிகளை கைது செய்ய போலீசார் ஹைதராபாத் விரைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் வியாழக்கிழமை திடீர் என இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 25 பேர் பலியாகினர், 85 பேர் காயம் அடைந்தனர். ரூ. 166 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் 18 மாதங்களுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டும். ஆனால் மேம்பாலம் கட்டப்படும் பகுதியில் எப்பொழுது பார்த்தாலும் கூட்ட நெரிசலாக இருப்பதால் கட்டுமானப் பணி தாமதமாகியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய விபத்து குறித்து மேம்பாலத்தை கட்டி வரும் ஹைதராபாத்தை சேர்ந்த ஐவிஆர்சிஎல் நிறுவன தலைவர் ஏ.ஜி.கே. மூர்த்தி கூறுகையில்,
எங்கள் நிறுவன வரலாற்றில் இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை. எதனால் மேம்பாலம் இடிந்து விழுந்தது என்று தெரியவில்லை. இது கடவுளின் செயல். மேம்பாலம் இடிந்து விழுந்ததில் எங்கள் நிறுவன ஊழியர்கள் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நிறுவனத்தின் எம்.டி. சுதிர் ரெட்டி பயணத்தில் உள்ளார். அவர் தற்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை என்றார்.
இந்நிலையில் ஐவிஆர்சிஎல் நிறுவன அதிகாரிகளை கைது செய்ய கொல்கத்தா போலீசார் ஹைதராபாத் விரைந்துள்ளனர்.