விபத்துகள் அதிகரிப்பு எதிரொலி.. பெங்களூர் நகர மேம்பால பராமரிப்பு மாநகராட்சியிடம் ஒப்படைப்பு
பெங்களூர்: விபத்துகள் அதிகரித்ததை தொடர்ந்து, பெங்களூர் வளர்ச்சி குழுமம் பராமரித்து வந்த சில முக்கிய மேம்பாலங்களை, மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் மாநகர சாலைகளின் பள்ளங்களால் ஏற்படும் டூவீலர் விபத்துகளால் பலர் பலியாவது தொடர் கதையானதால் பெங்களூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் சாலை பணிகளை அளிக்க பெங்களூர் வளர்ச்சி குழுமம் (பிடிஏ) முடிவு செய்துள்ளது.
பராமரிப்பு பணிகள் என்ற வகையில், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.60 கோடி செலவாகும். ஹெப்பால் வரையிலான 56 கி.மீ நீளம் கொண்ட அவுட்டர் ரிங் ரோடு, ஹெப்பால் மேம்பாலம், ஹெச்எஸ்ஆர் லேஅவுட் மேம்பாலம், மாரத்தஹள்ளி ரயில்வே மேம்பாலம், ராமமூர்த்தி நகர் கீழ்ப்பாலம், இப்ளூர் மேம்பாலம், அகரா மேம்பாலம், மாகடி ரோடு-சார்ட் ரோடு சந்திப்பு, நாயண்டஹள்ளி ரயில்வே கீழ்ப்பாலம், வீரனபாளையா மேம்பாலம், சும்னஹள்ளி மேம்பாலம், கல்யாண் நகர் மேம்பாலம் மற்றும் பத்ரப்பா லேஅவுட் மேம்பாலம் ஆகியவை ஒப்படைக்கப்பட உள்ளது.