மாட்டுத்தீவன ஊழல்.. லாலு பிரசாத் யாதவ்வின் ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்
ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதிய மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
900 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக தும்கா கருவூல மோசடி வழக்கில் லாலுடிபிரசாத் யாதவ்க்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிபதி சிவ்பால் சிங் தீர்ப்பளித்தார். இதனால் அவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ் நான்கு தீவன மோசடி வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார், அதற்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூன்று வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நான்காவது வழக்கான தும்கா கருவூல மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். ஆனால் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் லாலுவின் மனுவை இன்று நிராகரித்துள்ளது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாமின் கோரி இரண்டு மாதங்களுக்கு பிறகு மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால், ஜாமீன் கிடைக்குமா என்பதை அறிய இன்னும் இரண்டு மாதம் லாலு பிரசாத் யாதவ் காத்திருக்க வேண்டும்.