லாலுவுக்கு ஆப்பு... மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு
நாட்டையே உலுக்கிய ரூ1,000 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலு பிரசாத் யாதவை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை ரூ1,000 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. லாலு மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என்ற சிபிஐ கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
1990-ம் ஆண்டு முதல் 1997 வரை பீகார் முதல்வராக இருந்தபோது மாட்டுத் தீவனம் வாங்கியதில் ரூ1000 கோடி ஊழல் செய்தார் லாலு பிரசாத் யாதவ் என்பது வழக்கு. நாட்டையே இந்த ஊழல் வழக்கு உலுக்கியது.
பீகார் மாட்டுத் தீவன ஊழல்கள் தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் யாதவ் மீது மட்டும் 5 வழக்குகள் போடப்பட்டன.
5 ஆண்டு சிறை
இதில் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என 2013-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றொரு வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கில் லாலு ஜாமீனில் வெளியே வந்தார். அத்துடன் உச்சநீதிமன்றத்தில் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் லாலு.
குற்றச்சாட்டுகள் ரத்து
லாலு மீதான வழக்கு ஒன்றில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்து குற்றச்சாட்டுகளை ரத்து செய்தது. இதற்கு எதிராகவும் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 20-ந் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில் இந்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
லாலுவுக்கு சிக்கல்
இதில், லாலு மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கூடாது என்ற சிபிஐ வாதம் ஏற்கப்பட்டது. மேலும் லாலு பிரசாத் யாதவை மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. லாலு பிரசாத் யாதவ் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் லாலு பிரசாத் யாதவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.