ஊழல் வழக்கில் சிறை தண்டனை.. லாலுவின் எம்.பி. பதவி பறிப்பு!
டெல்லி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்கில் 2 ஆண்டுகாலத்துக்கு மேல் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருக்க மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டுவர முயற்சித்தது. ஆனால் கடும் எதிர்ப்பின் காரணமாக அது கொண்டுவரப்படவில்லை.
இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ரஷீத் மசூத்தின் பதவி நேற்று பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான லாலு பிரசாத் யாதவும் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ஜெகதீஷ் சர்மாவின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.