மாட்டுத் தீவன ஊழல் வழக்கு - பீகார் மாஜி முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவின் தலை தப்பியது
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் மாஜி முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவின் தலை தப்பியுள்ளது.
ராஞ்சி: தியோகர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வழக்கில் லாலு உள்ளிட்ட17 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜெகன்நாத்மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்தது.
பீகாரில் கடந்த 1991 முதல் 1995 வரையில் முதல்வராக லல்லு பிரசாத் யாதவ் இருந்தபோது கால்நடை தீவனம் வாங்குவதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. தியோகர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக லல்லு பிரசாத் உள்ளிட்ட 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த ஊழல் வழக்கில் சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததற்காக 2013ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் லல்லு பிரசாத் யாதவிற்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதேபோல், இந்த வழக்கில் லல்லு பிரசாத் மீது மேலும் 3 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இந்த வழக்கில் ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் தீர்ப்பளித்தார். லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி ஷிவ்பால் சிங், ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.
குற்றவாளிகளுக்கு ஜனவரி 3ஆம் தேதியன்று தண்டனை அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஷிவ்பால் சிங் கூறியுள்ளார். இதன் மூலம் மாஜி முதல்வரான லாலு மீண்டும் சிறை செல்ல உள்ளார். ஜெகன்நாத் மிஸ்ராவின் தலை தப்பியுள்ளது.