நித்தம் நித்தம் சப்பாத்தி... நெய் மணக்கும் சாம்பார்... இயந்திரங்களால் சமைக்கும் நொய்டா ரயில்வே!
நொய்டா: ரயில் பயணிகளுக்கு சுவை குறையாமல் உணவுகளை தயாரித்து வழங்குகிறது நொய்டாவில் அமைந்துள்ள இந்திய ரயில்வே உணவு தொழிற்சாலை. இங்கு முழுக்க, முழுக்க உயர் ரக கருவிகள் மூலம் சப்பாத்தி, சாதம் தயார் செய்யப்படுகிறது.
குறைவான விலையில், சுகாதாரத்துடன் தயாரித்து வழங்கப்படுவதால், இங்கு தயாரிக்கப்படும் உணவுகளுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நெட் வொர்க் ரயில்வேதுறை. பஸ்களை விட கூடுதல் வசதிகள் கிடைப்பதால் பெரும்பாலோர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
ரயிலிலேயே உணவு:
பயணிகளின் வசதிக்காக ரயில்களிலேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இதே போல் ரயில் பயணிகளுக்காக, உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்கழகம் அதாவது ஐஆர்சிடிசி சார்பில் உணவு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
உயர்ரக கருவிகளால் உணவு:
இந்த உணவுத் தொழிற்சாலையில் பெரும்பாலும் பணியாளர்கள் பங்களிப்பு இல்லாமல், உயர்ரக கருவிகள் மூலம் இங்கு உணவு தயார் செய்யப்படுகிறது.
10000 பேருக்கு சாப்பாடு:
4 மாடிகள் கொண்ட இத்தொழிற்சாலை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தினமும் 10,000 பேருக்கான அளவு சாப்பாடு தயார் செய்யப்பட்டு ராஜ்தானி, துரந்தோ, கிரந்தி ரயில் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
சுத்தமும், சுகாதாரமும்:
பிற இடங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை விட, இங்கு தயார் செய்யப்படும் உணவுகள் சுத்தம், மலிவான விலை, போதுமான அளவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் மத்தியில் இந்த உணவுகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.