டெல்லி டாக்டர் பெயரில் 5 ஆண்டுகள் வைத்தியம் பார்த்த போலி டாக்டர்... கார் வாங்கியதால் சிக்கினார்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக போலி மருத்துவர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ளது யஷ்வந்த்பூர். இங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் மாதம் ரூ 48 ஆயிரம் சம்பளத்தில் கடந்த 2009ம் ஆண்டு பயிற்சி மருத்துவராக பணிக்கு சேர்ந்துள்ளார் அதுல் பதக் (31) என்ற நபர்.
தன்னை மருத்துவர் என சான்றிதழ் சாட்சியங்களுடன் பணியில் சேர்ந்துள்ளார் அதுல். அம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை பரிசோதித்து சரியான மருந்துகளை எழுதி தந்துள்ளார். இதனால், நோயாளிகளுக்கோ அல்லது மற்ற டாக்டர்களுக்கோ அதுல் மீது சந்தேகமே வரவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் கார் ஒன்றை வாங்கியுள்ளார் அதுல். காரின் உரிமையாளரிடம் தான் டெல்லி மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் எனக் காட்டிக் கொண்ட அதுல், தன் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் விரைவில் முழுப் பணத்தையும் செலுத்தி விடுகிறேன் எனக் கூறி, ரூ 20 ஆயிரத்தை முன்பணமாக அளித்து காரை எடுத்துச் சென்றுள்ளார். பதிலுக்கு கார் உரிமையாளர் வசம் தனது பைக்கை ஒப்படைத்துள்ளார்.
மாதங்கள் ஓடியும் காருக்குரிய மீதிப்பணம் வராததால், அடிக்கடி அதுலுக்கு போன் செய்துள்ளார் கார் உரிமையாளர். ஆனால், எதிர்தரப்பில் சரியான பதில் வராமல் போகவே மீண்டும் காரை கொண்டு வந்து விட்டு விடும்படி அதுலிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காரின் உரிமையாளர் அவசர வேலையாக வெளிநாடு சென்று விட அதுலின் பைக் திருட்டுப் போனது. பைக் திருட்டுப் போன தகவலைக் கூறுவதற்காக அதுலைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார் கார் உரிமையாளர். ஆனால், அதுல் தனது நம்பரை மாற்றியதால் கார் உரிமையாளர் குழப்பமடைந்தார்.
எனவே, மருத்துவ இயக்கம் உதவியுடம் அதுலின் முகவரியைப் பெற முயற்சித்துள்ளார். அப்போது தான் அவருக்குத் தெரிந்துள்ளது, தன்னிடம் கார் வாங்கியவர் உண்மையான மருத்துவர் அதுல் அல்ல என்று. உண்மையான மருத்துவர் அதுல் டெல்லி மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
உடனடியாக இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார் கார் உரிமையாளர். அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதுநாள் வரை பெங்களூர் மருத்துவமனையில் மருத்துவராக வளைய வந்த அதுலின் உண்மையான பெயர் விகாஸ் சர்மா. ஜம்மு காஷ்மீரை சொந்த ஊராகக் கொண்ட விகாஷ் ஆயுர்வேதிக் மருத்துவம் படித்துள்ளார்.
உண்மையான மருத்துவர் அதுலின் சான்றிதழ்களை கைப்பற்றிய விகாஷ் அதனை கலர் ஜெராக்ஸ் செய்து தனது புகைப் படத்தை ஒட்டி பயன் படுத்தியது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விகாஷை கைது செய்த போலீசார் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல மருத்துவமனை ஒன்றில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் போலி மருத்துவர் ஒருவர் பணியாற்றியது அங்குள்ள மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.