சிவசேனா கடும் எதிர்ப்பு: பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி 2 வது முறையாக ரத்து
மும்பை: சிவசேனாவின் கடும் எதிர்ப்பு காரணமாக பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் மும்பை நிகழ்ச்சி இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கார் வாப்ஸி என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வருகின்ற 29-ம் தேதி மும்பையில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கஜல் இசை பாடகர் குலாம் அலி கலந்து கொள்வதாக இருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மும்பையில் குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது இது இரண்டாவது முறை
முன்னதாக குலாம் அலி கார் வாப்ஸி திரைப்படத்தில் பாடல் ஒன்றினை பாடியுள்ளார். அந்த படத்திலும் பாடலை அவரே பாடும் வகையில் உள்ளது. குலாம் அலியின் வருகையையொட்டி இரண்டு நாட்கள் கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு மகாராஷ்டிரா அரசுக்கு படத்தின் இயக்குநர் இளையசி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், குலாம் அலி கலந்து கொள்ளவிருந்த இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை மற்றும் புனே நடைபெறவிருந்த குலாம் அலியின் நிகழ்ச்சி சிவசேனா கட்சியின் கடும் எதிர்பால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.