காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது.. கர்நாடக முதல்வர் குமாரசாமி விடாப்பிடி
காலா படத்தை வெளியிடாமல் இருப்பதுதான் கர்நாடகாவின் அமைதிக்கு நல்லது என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: காலா படத்தை வெளியிடாமல் இருப்பதுதான் கர்நாடகாவின் அமைதிக்கு நல்லது என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசி பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் நடிகர் ரஜினி. ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் காலா படம் உலகம் முழுக்க எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஆனால் கர்நாடகாவில் மட்டும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் இந்த படம் வெளியாகிறது. இந்த படம் வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அம்மாநில திரைப்பட வர்த்தக சபை இந்த படத்தை திரையிட முடியாது என்று கூறியுள்ளது. இப்போது கர்நாடக முதல்வர் குமாரசாமி காலாவிற்கு எதிராக தன்னுடைய நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
காலாவை வெளியிடாமல் இருப்பதுதான் நல்லது. காலாவிற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காலாவிற்கு எதிராக கன்னட அமைப்புகளும் திரைப்பட வர்த்தக சபையும் என்னிடம் புகார் அளித்துள்ளனர். காலாவை திரையிட்டால் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
படம் வெளியாகும் தியேட்டர்களில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாநிலத்தின் அமைதிக்காக காலாவை திரையிடாமல் இருக்கலாம். எச்சரிக்கையை மீறி படம் வெளியாக வேண்டும் என்றால், விளைவுகளை தயாரிப்பாளர்தான் எதிர்கொள்ள வேண்டும். காலா பற்றிய ஹைகோர்ட் தீர்ப்பு நகல் இன்னும் வரவில்லை. நகல் வந்த பின் மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.