ஜன.10-ல் இலங்கை செல்கிறார் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர்!
டெல்லி/ கொழும்பு: மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் வரும் 10-ந் தேதி இலங்கை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க தாம் விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் சுஷ்மாவின் இலங்கை பயணம் தொடர்பாக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வரும் 10-ந் தேதி வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் இலங்கை செல்ல உள்ளார்.
இந்த பயணத்தின் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டோரை ஜெய்சங்கர் சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் ஜெய்சங்கர் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவும் ஜெய்சங்கரின் கொழும்பு பயணத்தை உறுதி செய்துள்ளார்.