இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் மார்ச் 3-ந் தேதி பாகிஸ்தான் பயணம்!
டெல்லி: இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெய்சங்கர் மார்ச் 3-ந் தேதியன்று பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி பாகிஸ்தான் உள்பட சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவை வலுப்படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சார்க் பயணம் மேற்கொள்வார் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி, வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு செல்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் தஸ்னியா அஸ்லாம், இந்திய பிரதமர் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை செயலாளர் பாகிஸ்தானுக்கு வரும் மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது என்ன மாதிரியான பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.
இருப்பினும் காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரச்சினைகள் குறித்தும் இந்த பயணத்தின் போது விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.