கர்நாடகம்: போலி வாக்காளர் அடையாள அட்டை... கணக்கில் வராத ரூ79 கோடி பறிமுதல்
கர்நாடகத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டையுடன் கணக்கில் வராத ரூ.79 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டையுடன் கணக்கில் வராத ரூ.79 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ. 25 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடகத்தில் வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் பெங்களூருவில் ஒரு வீட்டில் பழமையான வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.
மேலும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரும் 6.342 விண்ணப்பங்களும் கைப்பற்றப்பட்டன. இவற்றை பெற்றதற்கான 20,000 ரசீதுகளும் சிக்கியிருந்தன. அந்த வீட்டிலிருந்து 9 செல்போன், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
போலி வாக்காளர் அட்டைகள் பற்றி விசாரிக்க தேர்தல் அதிகாரிகள் பெங்களூருவுக்கு வருகை தரவுள்ளனர். போலி வாக்காளர் அட்டை விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் பெங்களூரில் பேட்டி அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் இருந்த போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.25 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டை பறிமுதல் தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றார் சஞ்சீவ்.