அப்செட் இருக்கத்தானே செய்யும்.. என்ன செய்வது.. சச்சின் பைலட் ரிட்டர்ன் பற்றி அசோக் கெலாட் கருத்து
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசியல் பிரச்சனையால், எம்எல்ஏவுக்கு மனதில் வருத்தம் இருக்கத்தான் செய்யும்.. இருந்தாலும், மறப்போம் மன்னிப்போம் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
அசோக் கெலாட் அரசுக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்பி சுமார் 18 எம்எல்ஏக்களை ரிசார்ட் அனுப்பிவிட்டார், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்.
இதையடுத்து தனது தரப்பு எம்எல்ஏக்களை பாதுகாப்பதற்காக அவர்களை ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்றார் அசோக் கெலாட்.
ஆட்சியை கலைக்கும் அளவு வலிமை இல்லாததை உணர்ந்து கொண்ட சச்சின் தனது நிலையிலிருந்து இறங்கி வந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது சமாதான கொடி பறக்க விட்டுள்ளார்.
முதல்வர் வேட்பாளர் யார்? அதிமுக யாருடன் கூட்டணி என்று அப்புறம் முடிவு பண்ணலாம்- அமைச்சர் ஜெயக்குமார்
மனக்குமுறல்
இந்த நிலையில் அசோக் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அவர் ஜெய்ப்பூரில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதை நீங்களே பாருங்கள்: எம்எல்ஏக்கள் மனக்குமுறல் அடைவது இயல்புதான். பல வாரங்களாக ரிசார்ட்டில் தங்கும் நிலைமைக்கு அவர்கள் வந்துள்ளார்கள்.
விளக்கம்
இப்போது நிலைமை சீரடைந்து உள்ளது. எனவே அவர்களை சந்தித்து நான் விளக்கம் கொடுத்துள்ளேன். மாநிலத்துக்கும், நாட்டுக்காகவும் பாடுபட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். எனவே இதுபோன்ற இடர்பாடுகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இறுதியில் மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றுவார்கள் என்று அவர்களுக்கு நான் உறுதி அளித்துள்ளேன்.
மறப்போம் மன்னிப்போம்
தவறுகளை நாம் மறக்க வேண்டியுள்ளது. ஜனநாயகத்திற்காக மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையை கையில் எடுக்க வேண்டியிருக்கிறது. ஜனநாயகம் தற்போது அபாய கட்டத்தில் இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எனது பக்கத்தில் இருக்கிறார்கள். இது மிகப்பெரிய வெற்றி. கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் செய்த தந்திரங்களை ராஜஸ்தானில் பாஜக நடத்திக் காட்ட முயன்று தோல்வியுற்று உள்ளது.
இணைய வேண்டிய நேரம்
ஜனநாயகத்திற்கான நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய தருணம் இது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏறத்தாழ, ராஜஸ்தான் மாநில அரசில் நிலவிவந்த பூசல் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்று கருதலாம். வரும் 14ம் தேதி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை அரசு நிரூபித்து விட்டால், அதன் பிறகு, எம்எல்ஏக்கள் அனைவரும் ரிசார்ட்டிலிருந்து வீடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.