கொரோனாவிலிருந்து மீண்ட அஸ்ஸாம் மாஜி முதல்வர் தருண் கோகாய்.. உடல் நலக்குறைவால் மரணம்
அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகாய் உடல் நலக்குறைவினால் காலமானார் அவருக்கு வயது 86.
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகாய் இன்று உடல் நலக்குறைவினால் காலமானார் அவருக்கு வயது 86. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தொடர் சிகிச்சை பெற்று வந்த தருண் கோகாய் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அசாம் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்தவர் தருண் கோகாய். அவருக்கு கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதில், "எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
டாக்டர்கள் அறிவுறுத்தலின்பேரில், தருண் கோகாய், தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அக்டோபர் 25ஆம் தேதி நலமுடன் வீடு திரும்பினார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது இதனையடுத்து கடந்த 2ஆம் தேதி குவஹாத்தியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருடைய உடல்நிலை இன்று மோசமடைந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலையில் மரணமடைந்தார் தருண் கோகாய்.