மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் காலமானார்
மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் டெல்லியில் இன்று காலமானார்.
டெல்லி: மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் (வயது 79) உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் 1961-ம் ஆண்டு உத்தரப்பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலாளராகவும் 1996-1998 ஆம் ஆண்டுகாலத்தில் மத்திய அமைச்சரவை செயலாளராகவும் பணிபுரிந்தார்.
மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை உருவாக்கும் குழுவின் தலைவராகவும் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.
டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் அமைப்பும் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.