ஊழல் குற்றவாளிகளுடன் சந்திப்பு- சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது விசாரணை- சுப்ரீம்கோர
டெல்லி: ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கின் குற்றவாளிகளை சந்தித்து பேசிய சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா தனது வீட்டில் ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் ற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாகவும், எனவே அவரை அந்த வழக்குகள் விசாரணையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகளுக்கான மையத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ. இயக்குனரை அவரது இல்லத்துக்கு வந்து சந்தித்தவர்களின் வருகை பதிவேடு பட்டியலை, அது தொடர்பான ஆவணங்களையும் பொதுநல அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பட்டியலை அங்குள்ள சிலர் தன்னிடம் அளித்ததாகவும் கூறினார்.
ஆனால் பிரசாந்த் பூஷணின் புகாரை மறுத்து ரஞ்சித் சின்கா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி ஊழலில் தொடர்புடைய நபர்களை பலமுறை ரஞ்சித் சின்ஹா சந்தித்தது தவறு என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் விசாரணை அதிகாரிகள் இல்லாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சின்ஹா சந்தித்திருக்கக்கூடாது. எனவே அவரிடம் விசாரணை நடத்தவேண்டியது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களுடன் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹா ஆலோசனைக் கூட்டம் நடத்தியது தொடர்பாக ஜூன் 7-ந் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டு உள்ளது.
இதனிடையே பிரசாந்த் பூஷண் பொய்யான வாக்குமூலம் அளித்துள்ளார் என்ற சின்ஹாவின் கூற்றையும் உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.