கேரள சட்டசபைத் தேர்தல்: பாஜக வேட்பாளராக களமிறங்கும் ஸ்ரீசாந்த்...திருவனந்தபுரத்தில் போட்டி !
டெல்லி: கேரளாவைச் சேர்ந்தவரும், முன்னாள் வேகப் பந்துவீச்சாளரும், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவரும், கோர்ட்டால் நிரபராதி என விடுவிக்கப்பட்டவருமான சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், கேரள சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கேரள மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. திருவனந்தபுரம் சட்டசபை தொகுதியின் வேட்பாளராக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிவிக்கப்பட்டு உள்ளார்.