ஜார்கண்டில் மாஜி துணை மேயர் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் மேயர் உட்பட 4 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் துணை மேயர் நீரஜ் சிங் உள்பட 4 பேரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தின் முன்னாள் மேயர் நீரஜ் சிங்(32), செவ்வாய்க்கிழமை மாலை காரில் சென்றுகொண்டிருந்தார்.
அவரது கார் ஸ்டீல் கேட் அருகே வந்தபோது மர்ம நபர்கள் காரை வழிமறித்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் நீரஜ்சிங், அவருடன் காரில் உடன் இருந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 4 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
நீரஜ்சிங் உடன் அவரது நண்பர் அசோக் யாதவ், கார் டிரைவர் மற்றும் மெய்க்காப்பாளர் ஆகியோர் என தெரியவந்துள்ளது. நீரஜ் சிங் வந்த கார் மீது 50 புல்லட்கள் பாய்ந்துள்ளது தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.