யுவராஜ் சிங் அப்பா.. எப்படி அப்படிப் பேசலாம்... டோணி பயிற்சியாளர் கண்டனம்
டெல்லி: இந்திய அணியின் கேப்டன் டோணி பற்றி ஆணவமாக விமர்சனங்கள் கூறுவதை, யுவராஜின் தந்தை யோகராஜ்சிங் நிறுத்த வேண்டும் என டோணியின் இளம்வயது பயிற்சியாளர் சான்சால் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைத் தொடரில் விளையாட யுவராஜ்சிங் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு டோணி தான் காரணம் என யுவராஜின் தந்தை குற்றம் சாட்டினார். மேலும், ‘டோணி பிச்சை எடுப்பார், ராவணன் போல அவரது கதை முடியும்' என்றும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் யோகராஜ் சிங்கின் இந்த பேச்சுக்கு டோணியின் முன்னாள் பயிற்சியாளர் சான்சால் பட்டாச்சார்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங் சேர்க்கப்பட்ட போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது டோணி தான் யுவராஜ்சிங் அணியில் இருப்பது நன்மை பயக்கும் என்று கூறி அவர் அணியில் இடம் பெற வழிவகுத்தார். அது மட்டுமல்ல பல தருணங்களில் யுவராஜ்சிங்குக்கு ஆதரவாகவே டோணி இருந்து வந்துள்ளார்.
யோகராஜ் ஒரு கிரிக்கெட் வீரர். அவருக்கு கிரிக்கெட் தேர்வு முறை நன்றாகத் தெரியும். 5 பேர் அடங்கிய தேர்வுக்குழுதான் அணியை தேர்வு செய்கிறது. கேப்டனிடம் தேர்வு குறித்து கருத்து கேட்கிறது அவ்வளவுதான். இதுவெல்லாம் கிரிக்கெட் வீரரான யோகராஜ் சிங்குக்கு தெரியாதா? வருங்காலத்தில் டோணி பிச்சை எடுப்பார் என்று கூறியது யோகராஜின் ஆணவத்தையே காட்டுகிறது. இதுபோன்ற ஆணவமான பேச்சை முதலில் அவர் நிறுத்த வேண்டும்.
டோணி இந்திய மக்களால் அதிகம் விரும்பப்படும் மாபெரும் கிரிக்கெட் வீரர். மற்றொரு வீரர் யுவராஜ்சிங். எனக்கும் டோணிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது என்று யுவராஜ்சிங்கே சொல்லி விட்டார். இநதிய ரசிகர்கள் டோணிக்கு ஆதரவாக பின்புலமாக இருக்கிறார்கள் என்பதை யோகராஜ்சிங் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.