கோவா காங்.-க்கு அடி.. மாஜி முதல்வர் ரவிநாயக் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா- பாஜகவுக்கு தாவல்!
பனாஜி: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அடியாக முன்னாள் முதல்வர் ரவிநாயக் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரவிநாயக் தமது ஆதரவாளர்களுடன் இன்று பாஜகவில் இணையக் கூடும் என்கின்றன தகவல்கள்.
கோவாவில் காங்கிரஸ் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு சவால்விடும் வகையில் 2017 சட்டசபை தேர்தலில் பாஜகவும் கணிசமான இடங்களைப் பெற்றது.
இத்தனைக்கும் 2017 தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வென்றது. ஆனால் சாதுரியமாக பாஜக, மாநில கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அடுத்தடுத்து பாஜக வளைத்துப் போட்டது.
மே.வங்கத்தை 2ஆக பிரியுங்கள்.. டார்ஜிலிங்கை மையமாக கொண்டு தனி மாநிலம் தேவை.. பாஜக எம்எல்ஏ பரபர கடிதம்
மமதாவின் திரிணாமுல் காங்.
இன்னொரு பக்கம் எஞ்சியிருந்த காங்கிரஸ் தலைவர்களை மமதா பானர்ஜி தமது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையேதான் போட்டி. ஆனால் கருத்து கணிப்புகளோ, பாஜகவே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள்தான் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
ரவிநாயக் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ரவிநாயக் இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். கடந்த சில நாட்களாகவே ரவிநாயக்தான் கோவா அரசியலின் பேசுபொருளாக இருந்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமையே ரவிநாயக் பாஜகவில் இணைவார் என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ரவிநாயக் ராஜினாமா செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரவிநாயக் இன்று பாஜகவில் இணைவார் என்கின்றன தகவல்கள்.
ரவிநாயக் பின்னணி
1991-93 மற்றும் 1994-ல் காங்கிரஸ் கட்சியின் கோவா முதல்வராக இருந்தவர் ரவிநாயக். பின்னர் 1998-1999-ல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி.யாகவும் அவர் பதவி வகித்தார். கடந்த ஆண்டு ரவிநாயக்கின் 2 மகன்களை திடீரென பாஜக கட்சியில் இணைத்து கொண்டது. இத்தனைக்கும் கோவாவின் மாஃபியா கேங் என ரவிநாயக்கையும் அவரது மகன்களையும் கடுமையாக விமர்சித்தது பாஜகதான். ஆனாலும் ரவிநாயக்கை இலக்கு வைத்து அவரது மகன்களை கட்சியில் சேர்த்திருந்தது பாஜக. தற்போது ரவிநாயக்கையும் வளைத்துப் போடுகிறது பாஜக.
காங். நிலைமை என்னவாகும்?
கோவா மாநில காங்கிரஸில் மூத்த தலைவர்கள் அனைவரும் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகுவது மிகப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதேநிலைமை நீடித்தால் கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் கருத்து கணிப்புகள் சொல்கிறபடி காங்கிரஸ் 5 இடங்களிலாவது வெல்ல முடியுமா? என்பதுகூட கேள்விக்குறியாகிவிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். காங்கிரஸ் வலிமையாக இருந்த கோவா மாநிலம் இப்போது தேடக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அந்தோ பரிதாபம்!