கொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்
அஹமதாபாத்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் இன்று காலமானார்.
92 வயதாகும் கேசுபாய் படேல் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மூச்சுவிடமுடியாமல் சிரமத்தை சந்தித்து, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
குஜராத் மாநிலத்தில் பாஜக சார்பில் 1995ம் ஆண்டு மற்றும் 1998 முதல் 2001 வரை முதல்வராக இருந்தவர் கேசுபாய் படேல். 2012ல், தற்போதைய பிரதமரும், முன்னாள் குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி இவருக்கு பதிலாகத்தான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார்.
தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினரான கேசுபாய் படேல் , பாஜகவின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவர். இவர் குஜராத்தில் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2012ல் பாஜகவில் இருந்து கருத்து வேறுபாட காரணமாக பிரிந்த சேசுபாய் படேல் குஜராத் பரிவர்த்தன் கட்சியை நிறுவி, விஸ்வதர் சட்டமன்ற தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். எனினும் 2014-இல் நோய் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
நாளை நமதே... இந்த நாளும் நமதே... மணவிழாவில் பாடல் பாடி அசத்திய அமைச்சர்... கரைபுரண்ட உற்சாகம்..!
அதன்பிறகு வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து சேசுபாய் படேல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் இவரது உறவினர்களில் ஒருவருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் கேசுபாய் படேலுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த கேசுபாய் படேல் மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்தித்த நிலையில், இன்று காலமானார். முன்னாள் முதல்வரான கேசுபாய் படேல் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.