குஜராத் போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிக்கிய மாஜி ஐபிஎஸ் அதிகாரி வன்சராவுக்கு ஓய்வுக்கு பின் புரமோசன்
அகமதாபாத்: குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது நடத்தப்பட்ட போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து பின்னர் விடுவிக்கப்பட்டவரும் ஓய்வு பெற்றவருமான சர்ச்சைக்குரிய ஐபிஎஸ் அதிகாரி வன்சராவுக்கு தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக மோடி, உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்த காலங்களில் என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதில் சோராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் வழக்குகள் மிக முக்கியமானவை.
இந்த வழக்குகளில் 2007-ம் ஆண்டு அமித்ஷா, குஜராத் போலீஸ் அதிகாரி வன்சரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்குகளில் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் வன்சரா. 2015-ல் ஜாமீனில் விடுதலையானார்.
சிறையில் இருந்த போது, போலி என்கவுண்ட்டருக்கு காரணமே மோடியும் அமித்ஷாவும்; அவர்கள்தான் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் என வன்சரா வெளியிட்ட அறிக்கை பெரும் புயலை கிளப்பியது. சிறையில் இருந்த நிலையில் 2014-ல் வன்சரா ஓய்வும் பெற்றார்.
டெல்லி வன்முறை.. 3 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்தார் மோடி.. அமைதி காக்க அழைப்பு
பின்னர் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் போலி என்கவுண்ட்டர் வழக்குகளில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார். அதேபோல் வன்சராவும் அனைத்து வழக்குகளில் இருந்தும் 2019-ல் விடுவிக்கப்பட்டார்.
தற்போது வன்சரா ஓய்வூதியம் பெற்று வருகிறார். இந்நிலையில் வன்சராவுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி குஜராத் அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.