துளசிராம் என்கவுண்ட்டர் வழக்கு: குஜராத் முன்னாள் டிஜிபி பி.சி. பாண்டேவை விடுவித்தது சிபிஐ கோர்ட்!
மும்பை: நாட்டை உலுக்கிய துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து குஜராத் முன்னாள் டி.ஜி.பி.யான பி.சி. பாண்டேவை சி.பி.ஐ. நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த 2005ஆம் ஆண்டு அவரை கொலை செய்ய வந்ததவர்கள் என்று கூறி சொராபுதீன் சேக் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006ம் ஆண்டில் குஜராத் போலீசாரால் எண்கவுண்டரில் கொல்லப்பட்டார். அவர் தப்பிச் செல்ல முயன்றபோது கொன்றதாக குஜராத் போலீஸ் கூறியது.
இந்த இரு சம்பவங்களுமே குஜராத் போலீசாரால் போலியாக நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் சம்பவம் என்ற புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்துக்கும் போனது. பின்னர் இந்த போலி என்கவுண்ட்டர் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
மும்பையில் உள்ள சி.பி.ஐ.நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த இரு வழக்குகளிலும் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது குற்றம்சாட்டப்பட்டது. துளசிராம் வழக்கில் காவல்துறை அதிகாரியான பி.சி. பாண்டே மீது குற்றம்சாட்டப்பட்டது.
இருப்பினும் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் கடந்த டிசம்பர் மாதம் அமித்ஷா விடுவிக்கப்பட்டார். அனைத்து என்கவுண்ட்டர் வழக்குகளில் இருந்துமே அமித்ஷா விடுதலையானார்.
இந்நிலையில் துளசிராம் பிரஜாபதி என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து பி.சி. பாண்டேவை விடுவித்து சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி கோசவி இன்று உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.