மால்டா தீவில் பதுங்கிய லலித் மோடி... விரைவில் 'தூக்குகிறது' இண்டர்போல்
டெல்லி: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி மால்டா தீவுகளில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச போலீசான இண்டர்போல் விரைவில் லலித் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.பி.எல் தலைவராக இருந்த லலித் மோடி பல்வேறு நிதிமுறை கேட்டில் ஈடுபட்டார் என்பது புகார். இதை தொடர்ந்து 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
நிதிமுறைகேடு தொடர்பாக லலித்மோடிக்கு எதிராக கிரிக்கெட் வாரியம் போலீசில் புகார் கொடுத்தது. முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமலாக்கப்பிரிவு அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதை தொடர்ந்து லலித்மோடி இந்தியாவில் இருந்து தலைமறைவாகி லண்டனில் தஞ்சம் புகுந்தார்.
வரி ஏய்ப்பு, பணபரி வர்த்தனை மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது இருந்தன. லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் மந்திரி வசுந்தரா ராஜே ஆகியோர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் லலித்மோடி மீதான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.
லலித்மோடியை கைது செய்ய ஏதுவாக இண்டர்போல் மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்கான ஆவணங்கள் இண்டர்போலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இத்தாலிக்கும் ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் இடையே உள்ள மால்டா தீவுகளில் லலித் மோடி பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இண்டர்போல் அதிகாரிகள் லலித் மோடியை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கக் கூடும் என கூறப்படுகிறது.