இதை எதிர்பார்க்கவே இல்லையே.. திடீரென போய் பாஜகவில் சேர்ந்த மாதவன் நாயர்!
முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பாஜகவில் இணைந்தார்.
கன்னூர்: இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருடன் மேலும் 4 பேர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
கேரளாவின் சிவகிரியில் உள்ள நாராயணகுரு மடத்தில் மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக அமித்ஷா விமானம் மூலம் கண்ணூர் வந்து, பின்னர் அங்கிருந்து கார் மூலம் சிவகிரி மடத்திற்கு சென்றார்.
கேரள அரசு
மடத்தில் நடைபெற்ற அனைத்து விசேஷ பூஜைகளிலும் அமித்ஷா கலந்து கொண்டார். அதன்பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித்ஷா, "சபரிமலை விவகாரத்தில் பக்தர்களுக்கு எதிராக கேரள அரசு செயல்படுகிறது.
நெருப்புடன் விளையாட்டு
இதை வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஆர்எஸ்எஸ், சங்பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பக்தர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. இதேபோன்ற ஒரு ஒடுக்குமுறையினை பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடருமானால், அதற்கு பெரிய விலையை தர வேண்டி இருக்கும். கேரள அரசின் இந்த விளையாட்டு நெருப்புடன் விளையாடுவது போன்றது" என்று பேசினார்.
5 பேர் இணைந்தனர்
முன்னதாக, அமித்ஷா முன்னிலையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கட்சியில் இணைந்தார். அவருடன் திருவாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், கேரள மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி ராமன் நாயர் உள்ளிட்ட மேலும் 4 பேரும் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
மோடியின் பாதிப்பு
கடந்த 2003 முதல் 2009 வரை இஸ்ரோ தலைவராக இருந்தவர் மாதவன் நாயர் ஆவார். தற்போது பாஜகவில் இணைந்தது பற்றி அவர் கூறும்போது, "சிறிது காலமாகவே நான் பாஜகவிற்காக பணியாற்றி வந்தேன். நாட்டின் மேம்பாடு குறித்த பிரதமர் மோடியின் எண்ணங்கள் என்னை ரொம்பவே பாதித்தது. அதன் காரணமாகவே தற்போது என்னை பாஜகவில் இணைத்து கொண்டேன்" என்று தெரிவித்தார்.