மாஸ் காட்டும் ஜன சேனா கட்சி… பவன் கல்யாண் முன்னிலையில் சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் இணைந்தார்
விஜயவாடா: பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஜே.டி. லக்ஷ்மி நாராயணா இணைந்துள்ளார்.
மக்களவை தேர்தலோடு ஆந்திரா மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. அங்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பவன் கல்யாணின் ஜன சேனா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மும்முனை போட்டியில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி மீது ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர் வந்தால் மாறிடும், அவர் வந்தால் மாறிடும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பவன் கல்யாண் கட்சிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
ஆஹா.. இதை கவனிச்சீங்களா.. பெயரை மாற்றி விட்டார் மோடி.. டிவிட்டரில்!
சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் ஐஏஎஸ், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்தார். தற்போது சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் லக்ஷ்மி நாராயணா ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார்.
இன்று விஜயவாடாவில் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாணை நேரில் சந்தித்து லக்ஷ்மி நாராயணா அக்கட்சியில் இணைந்தார். ஆந்திராவில் இந்த முறை சந்திரபாபு நாயுடுவுக்கும், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் பவன் கல்யாண் கடும் சவாலாக இருப்பார் என கூறப்படுகிறது.
மாஸ் காட்டி வரும் பவன் கல்யாணை போன்று, கெத்து காட்டிய அவரது அண்ணன் சிரஞ்சீவி, கடைசியில் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிட்டு மீண்டும் சினிமா பக்கமே திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.