சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
கொல்கத்தா: முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைதாகி கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டுள்ள அங்குள்ள பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன் 43 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்பு கோவையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரியும், அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரியும் அவரது வக்கீல் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கர்ணன், கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பிரெசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.