சிறையில் அடைத்தும் அடங்க மறுக்கும் செக்ஸ் புகார் பிராங்கோ.. கன்னியாஸ்திரிக்கு கொலை மிரட்டல்!!
பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிஷப் பிராங்கோ கன்னியாஸ்திரி குடும்பத்தினருக்கு தனது ஆதரவாளர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்: பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிஷப் பிராங்கோ கன்னியாஸ்திரி குடும்பத்தினருக்கு தனது ஆதரவாளர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் பிராங்கோ முலக்கல் மீது பலாத்கார புகார் கொடுத்தார்.
ஆனால் பிஷப் மீதான நடவடிக்கை தாமதமானதை அடுத்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவிடம் பலாத்காரம் குறித்து புகார் அளித்துள்ளார்.
வாடிகனுக்கு கடிதம்
அதாவது கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், தன்னை பலதடவை பலாத்காரம் செய்தார். அச்சமும், அவமானமும் இருந்ததால், நான் வெளியே சொல்லவில்லை. தற்போது நான் புகார் கொடுத்த பிறகும், திருச்சபை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
சுறுசுறுப்பான போலீஸ்
இதையடுத்து பிஷப் முலக்கல்லை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். பிஷப் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளூர் போலீசார் சுறுசுறுப்பாகினர்.
பலாத்காரம் உண்மை
பிஷப் பொறுப்பிலிருந்து பிராங்கோ முலக்கல் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிராங்கோ கன்னியாஸ்திரிக்கு பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் பிஷப் பிராங்கோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிராங்கோ கொலை மிரட்டல்
இந்நிலையில் பிராங்கோவின் ஆதரவாளர்கள், தங்கள் குடும்பத்தினருக்கு, கொலை மிரட்டல் விடுப்பதாக, கன்னியாஸ்திரியின் சகோதரி, போலீசில் புகார் அளித்துள்ளார். முன்னாள் பிஷப் பிராங்கோவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.