சோலார் பேனல்- லஞ்சம் வாங்கினார் உம்மன் சாண்டி: விசாரணை கமிஷனில் பரபர தகவல்
சோலார் பேனல் ஊழலில் உம்மன்சாண்டி லஞ்சம் வாங்கினார் என்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
திருவனந்தபுரம் : சோலார் பேனல்கள் ஊழல் விவகாரத்தில் சரிதா நாயரின் குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்டிருந்த நீதிபதி கமிஷனின் விசாரணையை அறிக்கையை நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சரிதா நாயர் என்கிற தொழிலதிபர் சோலர் பேனல்கள் முறைக்கேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தான் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பலருக்கும் லஞ்சம் கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் முதல்வர் உட்பட தன்னை பலரும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினார்கள் என்றும் அவர் புகார் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சரிதா நாயர் மற்றும் அவரது பார்ட்னர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சரிதா நாயர் ஜாமீனில் வெளியில் இருக்கிறார். இந்நிலையில் சரிதா நாயரின் வீடியோ வெளிவந்து கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த ஊழல் புகாரை விசாரிக்க நீதிபதி சிவராஜன் தலைமையில் 2013ம் ஆண்டு விசாரணைக்குழுவை அமைத்தார் அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி.
இந்த ஊழல் புகாரால் கேரள காங்கிரஸ் கட்சிக்கும், உம்மன் சாண்டி அரசுக்கும் பெரும் அவமரியாதை ஏற்பட்டது. சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நீதிபதி சிவராஜன் குழுவின் அறிக்கை முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையை நேற்று சட்டப்பேரவையில் வெளியிட்டார் பினராயி விஜயன்.
இதில் சரிதா நாயரிடம் இருந்து தனது உதவியாளர்கள் மூலம் பலதவணைகளில் 2 கோடியே 16 லட்சம் பணம் பெற்றதாக உம்மன் சாண்டி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் யார் யாருக்கு எல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்கிற விவரமும், உம்மன் சாண்டி மற்றும் பிற அமைச்சர்கள் சரிதா நாயரை எப்படி எல்லாம் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தினார்கள் என்கிற விரிவான அறிக்கையும் அதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அப்போதைய மத்திய இணையமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதனையடுத்து இந்த விசாரணை அறிக்கையை கேரள டி.ஜி.பி ராகேஷ் தேவன் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு அமைத்து அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர் பதியுமாறு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய உம்மன் சாண்டி, இது கேரள இடதுசாரி அரசின் திட்டமிட்ட நடவடிக்கை. இதைப்பார்த்தால் விசாரணை அறிக்கை போல தெரியவில்லை சரிதா அறிக்கையைப் போல் உள்ளது என்று விமர்சித்து உள்ளார்.