சுரங்க ஊழல்: கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி கைது
பெங்களூரு: சட்டவிரோத சுரங்கத்தொழில் வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டியை சிறப்பு புலனாய்வுப் படையினர்(எஸ்ஐடி) கைது செய்தனர்.
சட்டவிரோத சுரங்கத்தொழில், நீதிபதிக்கு லஞ்சம் வழங்கியது உள்பட பல்வேறு வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ, இந்த வழக்குகளில் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டியை கடந்த 2011 செப்டம்பர் 5 ஆம் தேதி கைது செய்திருந்தது. 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு தன் மீதான 13 வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த ஜனார்தன ரெட்டி மீது லோக் ஆயுக்தவின் சிறப்பு புலனாய்வுப் படை (எஸ்ஐடி) சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக லோக் ஆயுக்த போலீஸார் முன்பு ஆஜராகுமாறு ஜனார்தன ரெட்டிக்கு சிறப்பு புலனாய்வுப்படை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்பேரில் பெங்களூரு, லோக் ஆயுக்த தலைமை அலுவலகத்தில் இன்று ஆஜரான ஜனார்தன ரெட்டியிடம் லோக் ஆயுக்த போலீஸ் ஐஜிபி கே.எஸ்.ஆர்.சரண்ரெட்டி தலைமையிலான சிறப்பு புலனாய்வுப் படையினர் விசாரணை நடத்தினர். பின்னர், ஜனார்தன ரெட்டியை சிறப்புலனாய்வுப் படையினர் கைது செய்தனர்.
இது குறித்து சரண்ரெட்டி கூறுகையில், "பிளாக்கோல்ட் இரும்புத்தாது சுரங்கம் மற்றும் மினரல்ஸ் கம்பெனிகள் சட்டவிரோத சுரங்கத்தொழிலில் ஈடுபட்டது தொடர்பாக அதன் உரிமையாளர் ஜனார்தன ரெட்டி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரை விசாரணைக்கு அழைத்திருந்தோம்.விசாரணை முடிவில் ஜனார்தன ரெட்டியை கைது செய்துள்ளோம் என்றார்.
பின்னர் லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஜனார்தன ரெட்டியை நவ.23-ஆம் தேதி வரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுப்படை போலீஸாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.