நிலத்தகராறில் 8 வயது சிறுமியை சுட்டுக்கொன்ற முன்னாள் எம்எல்ஏ.. பீகாரில் பரபரப்பு
பீகாரில் நிலத்தகராறில் 8 வயது சிறுமி ஒருவரை முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொன்ற சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: பீகாரில் நிலத்தகராறில் 8 வயது சிறுமி ஒருவர் முன்னாள் எமஎல்ஏவால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம், சசாரம் மாவட்டத்தில் உள்ள பிக்ரம்கஞ்ச் சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் சூர்யடியோ சிங். இவருக்கு அப்பகுதியில் என்ன டென்டுனி கிராமத்தில் சொந்தமாக நிலம் இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலம் தொடர்பாக சூர்யடியோ சிங்கின் குடும்பத்தாருக்கும் அப்பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மூண்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியது.
சரமாரியாக சுட்ட முன்னாள் எம்எல்ஏ
இதில் ஆத்திரமடைந்த முன்னாள் எம்எல்ஏ சூர்யடியோ சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் திடீரென்று துப்பாக்கிகளை எடுத்து எதிர் தரப்பினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
8 வயது சிறுமி பலி
இதில் ஷகீலா என்ற 8 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தாள். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனயில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மனைவி உட்பட 7 பேர் கைது
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் முன்னாள் எம்எல்ஏ சூர்யடியோ சிங் மற்றும் அவரது மனைவி உதவியாளர்கள் என 7 பேரை கைது செய்துள்ளனர்.
போலீஸ் குவிப்பு
மேலும் சூர்யடியோ சிங்கின் வீட்டில் இருந்து மூன்று துப்பாகிகளையும் பேலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வன்முறைகள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் டென்டுனி கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.