போட்டியின்றி தேர்வு.. ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபா எம்பியானார் மன்மோகன் சிங்
ஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவையில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்த நிலையில், வேறு யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் மன்மோகன்சிங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மன்மோகன்சிங்கிற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் வாழ்த்து தெரிவித்தார்.
"முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். டாக்டர் சிங்கின் தேர்வு முழு மாநிலத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம். அவரது பரந்த அறிவும், வளமான அனுபவமும், ராஜஸ்தான் மக்களுக்கு நிறைய பயனளிக்கும், "என்று முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங்கின் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதியுடன் முடிவடைந்தது. மன்மோகன் சிங் 5 முறையும் அசாம் மாநிலத்தில் இருந்தே தேர்வு செய்யப்பட்டு ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர்.
தற்போது அசாமில் காங்கிரஸ்க்கு போதுமான அளவு எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்தது. அதன்படி கடந்த 13ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்தார் மன்மோகன் சிங்.
அவரை ஒருமனதாக தேர்வு செய்யும் அளவிற்கு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இருந்ததால் எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.