பிரதீபா பாட்டீல் தம்பியை கொலை வழக்கில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவு!
ஜால்காவ்: முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் சகோதரர் கஜேந்திரா சிங்கை கொலை வழக்கு ஒன்றின் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் விஷ்ராம் பாட்டீல் கடந்த 2005 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம் ஜால்கானில் கொலை செய்யப்பட்டர். இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. முதலில் போலீஸ் விசாரித்தபோது இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலைக்கு திட்டம் தீட்டியவர் கஜேந்திரா சிங் பாட்டீல் என்று கூறினர்.
விஷ்ராம் பாட்டீல் கொலை செய்யப்பட்டதில் இதே குற்றச்சாட்டை அவரது மனைவி ரஜினி பாட்டீல் முன் வைத்தார். எனது கணவர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தற்போது இவ்வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் கஜேந்திரா சிங் பாட்டீல் பெயரை சேர்க்க சி.பி.ஐ.க்கு மகாராஷ்டிர மாநிலம் ஜால்காவ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஜேந்திரா சிங் பாட்டீல் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் இளைய சகோதரர் ஆவார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2007 ஆம் ஆண்டு பிரதீபா பாட்டீல் குடியரசுத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2012 ஆம் ஆண்டுவரை ஐந்தாண்டுகாலம் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார் பிரதீபா பாட்டீல்.