மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம்... ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏ மரணம்!
ஜெய்பூர்: பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்.எல்.ஏ. உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, டாஸ்மாக் கடையை மூடக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறிப் போராடிய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது ராஜஸ்தானிலும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குர்சரண் சப்ரா (65). ராஜஸ்தானில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், லோக்ஆயுக்தா சட்டத்துக்கு மேலும் அதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இவர் கடந்த மாதம் 2ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த குர்சரண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுயநினைவை இழந்ததால் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு தினங்களாக கோமா நிலையில் இருந்த அவருக்கு இயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெலாட் விடுத்துள்ள அறிக்கையில், ''ராஜஸ்தான் மாநில அரசின் அலட்சிய போக்கால்தான், மதுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குர்சரண் சப்ரா மரணம் அடைந்திருக்கிறார். சப்ராவை முதலமைச்சர் சந்தித்து பேசி, அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தார் சப்ரா பிழைத்திருக்கக்கூடும்'' எனத் தெரிவித்துள்ளார்.