"ஆபரேஷன் கக்கூன்"... வீரப்பனைச் சுட்டுக் கொன்றது எப்படி?... புத்தகம் எழுதுகிறார் விஜயகுமார்!
டெல்லி: சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி என்பது குறித்து விரிவான தகவல்களுடன் புதிய புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார் அதிரடிப்படை முன்னாள் தலைவர் விஜயகுமார்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநில வனப்பகுதிகளில் சந்தன மரங்களை வெட்டி, அதனைக் கடத்தி 20 ஆண்டுகளாக தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். இவர் மீது போலீஸ், வனத்துறையினர் உள்பட 180 பேரை கொலை செய்ததாகவும், 200-க்கும் மேற்பட்ட யானைகளை கொன்று, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வனப்பகுதிக்குள் தலைமறைவாக இருந்த வீரப்பனை கைது செய்ய நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டன. இது தொடர்பாக அமைக்கப்பட்ட தமிழக சிறப்பு அதிரடிப் படைக்கு தலைவராக ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
ஆபரேசன் கக்கூன்
ஆபரேசன் கக்கூன் (பட்டுப்பூச்சி ஆபரேஷன்) என்று வீரப்பன் வேட்டைக்கு பெயர் சூட்டப்பட்டது. மேலும், வீரப்பன் பதுங்கியிருந்த வனப்பகுதிக்குள் மாறுவேடத்தில் அதிரடிப்படையினர் ஊடுருவினர். வீரப்பன் கும்பலிலும் அவர்களில் ஒருவர் இணைந்தார்.
ரகசியத் தகவல்
இந்நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி, தனது கண் சிகிச்சைக்காக வனப்பகுதிக்குள் இருந்து வெளியேற திட்டமிட்டார். இதனை அக்கும்பலில் இருந்த அதிரடிப்படை வீரர் தனது குழுவுக்கு ரகசியமாகத் தெரிவித்தார்.
ஆம்புலன்சில் பயணம்
அதன் தொடர்ச்சியாக வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த வீரப்பன், தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் பயணம் செய்ய ஆயத்தமானார். ஆனால், அந்த ஆம்புலன்ஸ், போலீசாரின் வாகனம் என்பது பிறகு தான் அவர்களுக்குத் தெரிந்தது.
வீரப்பன் பலி
அதற்குள்ளாக ஆம்புலன்சை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் வீரப்பனை சரண் அடைந்து விடும்படி எச்சரித்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல், வீரப்பன் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுடவே, அதிரடிப்படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே வீரப்பன் பலியானார். அவருடைய கூட்டாளிகள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர்.
பரபரப்பு
இந்த என்கவுண்டர் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவம் குறித்து பல்வேறு வேறுபட்ட தகவல்களும் உலா வருகின்றன.
புத்தகம்
இந்நிலையில், வீரப்பனுக்கு எதிரான இந்த வேட்டையை தலைமை தாங்கி வழிநடத்திய அப்போதைய சிறப்பு அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இவர் சி.ஆர்.பி.எப். தலைவராக பணியாற்றி, ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
விரிவான தகவல்கள்
தனது புத்தகம் குறித்து விஜயகுமார் கூறுகையில், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி தெளிவான, சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என்பது எனது நோக்கம். அதற்காகவே இந்த புத்தகத்தை எழுதி வருகிறேன். இது எனது நேரடி அனுபவம் நிறைந்த புத்தகம். உண்மையான தகவல்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக, சிலரது பெயர்களை குறிப்பிடாமல் விட்டிருக்கிறேன். மற்றபடி, அனைத்து தகவல்களும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
பார்க்கலாம்.. ஆபேரஷனைப் போலவே புத்தகமும் அதிரடியாக இருக்குமா என்பதை!