திரிணாமுல் காங்கிரஸில் இணைகிறார் திரிபுரா மாஜி முதல்வர் சமிர் ராஜன்
அகர்தலா: திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சமிர் ராஜன் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்வராக உள்ளார். சட்ட சபையில் மொத்தம் 60 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 50 பேர் ஆளும் கட்சி உறுப்பினர்கள். 10 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், திரிபுரா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சமிர் ராஜன் பர்மன், காங்கிரசில் இருந்து விலகி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் இணைகிறார். இதேபோல், 6 எம்எல்ஏக்களும் திரிணாமுல் காங்கிரசில் ஐக்கியமாக உள்ளனர்.
இதுகுறித்து, திரிபுரா முன்னாள் முதல்வர் சமிர் ராஜன் பர்மானின் மகனும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான சுதிப் ராய் கூறுகையில், எனது தந்தை மற்றும் நான் உட்பட 6 எம்எல்ஏக்களும் கட்சியில் இருந்து விலகி அடுத்த மாதம் திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளோம். திரிபுராவில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை மம்தா பானர்ஜி தலைமையில் சந்திக்க விரும்புகிறோம்.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் காங்கிரஸ் தனித்துவத்தை இழந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்த நிலையில், திரிபுராவில் எப்படி அவர்களை எதிர்த்து அரசியல் செய்ய முடியும்? என்றார்.
அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கை உயர்த்த மம்தா திட்டமிட்டுள்ளார். திரிபுராவில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் கணிசமான அளவு உள்ளனர். எனவே, 2018ம் ஆண்டு திரிபுராவில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் போட்டியிட ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில்தான் காங்கிரஸ்சில் இருந்து நீக்கப்பட்ட 6 எம்எல்ஏக்களை, திரிணாமுல் தங்கள் பக்கம் இழுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.