பெட்ரோல் பங்க் நடத்தப் போகும் 16 பெண் கைதிகள்.. ஹைதராபாத் சிறையில்!
ஹைதராபாதில் உள்ள ஒரு சிறையில் இன்று முதல் முன்னாள் பெண் கைதிகளால் பெட்ரோல் பங்க் நடத்தப்படவுள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாதில் உள்ள சன்சல்குடா சிறையில் முழுக்க முழுக்க முன்னாள் பெண் கைதிகளால் இன்று முதல் பெட்ரோல் நிலையம் தொடங்கப்படவுள்ளது.
பதறிய காரியம் சிதறும் என்பதை போல் அவசரத்தில் செய்த காரியம் சிறியதாக இருந்தாலும் அதன் பின்விளைவுகள் மிகவும் பெரிதாக இருக்கும். இதனால்தான் பொறுமை காக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவர்.
ஒரு வினாடியில் ஏற்படும் முன்கோபத்தாலும், பேராசையாலும், சபலத்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பலாத்காரம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு தன் குடும்பத்தினரை விட்டுவிட்டு சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
ஞானோதயம் பிறக்கும்
சிறைக்கு வந்ததும் தாம் செய்தது எத்தனை முட்டாள்தனம் என்று நினைக்க வைக்கிறது. அதன்பின்னர் அவர்களுக்கு ஞானோதயம் பிறந்து தங்களை நல்வழிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுத்தி கொள்கின்றனர். கைதிகளின் மறுவாழ்வுக்காக போலீஸாரும் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
படிப்பு, கைதொழில்
சிறையில் உள்ள கைதிகளின் விருப்பங்களையும் அவர்களது ஆர்வங்களையும் போலீஸார் மேம்படுத்தி வருகின்றனர். அதிகபட்ச தண்டனை பெறும் கைதிகள் தங்கள் இளமை காலத்தை சிறையிலேயே கழிக்க நேரிடுவதால் சிறைவாசத்துக்கு பின்னர் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
சிறையில் பெட்ரோல் பங்க்
அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஒரு படி மேலே போய் சிறையில் பெட்ரோல் நிலையத்தை இன்று தொடங்கவுள்ளது. அதை முற்றிலும் முன்னாள் பெண் கைதிகள் நிர்வகிக்கப் போகிறார்கள்.
எந்த சிறையில்
ஹைதராபாதில் சன்சல்குடா சிறையில் ஐஓசியின் பெட்ரோல் பங்க் தொடங்கப்படவுள்ளது. இன்று முதல் விற்பனை தொடங்கவுள்ளது. இங்கு சிறையில் தண்டனை பெற்று வெளியே போன 16 பெண் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டது.
12 ஆயிரம் சம்பளம்
பெண் ஒருவருக்கு தலா ரூ.12,000 சம்பளமாக வழங்கப்படவுள்ளது. மொத்தம் 16 முன்னாள் பெண் கைதிகள் இரு ஷிப்ட் முறையில் பணியாற்றுவர். இந்த 16 பேரை சிறைத் துறை டிஜிபி வி.கே.சிங் நியமனம் செய்தார். அதை சிறை துறை அதிகாரிகள் மேற்பார்வை செய்வர். பெட்ரோல் நிரப்புவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.